வாஷிங்டனில் நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சந்திப்பு விருந்து நிகழ்ச்சியின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பு விருந்து நிகழ்ச்சியின் போது, நிகழ்ச்சி நடைபெற்ற விடுதிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதில் ஜனாதிபதி ட்ரம்ப் காயமின்றி நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.
வாஷிங்டன் ஹில்டன் விடுதியில் நேற்று மாலை வருடாந்த ஊடக கலா நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் ஜனாதிபதி மேடையில் இருந்த போது, விடுதிக்கு வெளியேயுள்ள பாதுகாப்புச் சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டுள்ளது.
இதனையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் (Secret Service) உடனடியாக ஜனாதிபதியை மேடையிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர்.
இந்தத் தாக்குதலில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
இருப்பினும், பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
அவர் அணிந்திருந்த குண்டு துளைக்காத ஆடை (Bulletproof vest) அவரது உயிரைக் காப்பாற்றியது.
தாக்குதலைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், பல ஆயுதங்களுடன் வந்த நபர் ஒருவர் பாதுகாப்புச் சாவடியை நோக்கிப் பாய்ந்ததாகவும், ரகசிய சேவை அதிகாரிகள் அவரைச் சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவித்தார்.
சந்தேக நபர் கலிபோர்னியாவின் டொரன்ஸைச் சேர்ந்த 31 வயதுடைய கோல் டோமாஸ் ஆலன் (Cole Tomas Allen) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மீது கூட்டாட்சி அதிகாரிகளைத் தாக்கியது மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளில் ஜனாதிபதி ட்ரம்ப் மீதான எத்தனையோ தாக்குதல் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.



















