இலங்கையின் தொழிலாளர் வரலாறு என்பது, பல தசாப்தங்களாகத் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக இரத்தமும், கண்ணீரும், வியர்வையும் சிந்திய பெருமைமிக்க போராட்டத்தின் கதையாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். புpரதமர் விடுத்துள்ள தொழிலாளர் தின வாழ்த்து செய்தியில் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
1893ஆம் ஆண்டு அச்சுத் தொழிலாளர் வேலைநிறுத்தத்திலிருந்து இந்நாட்டின் உழைக்கும் மக்கள் ஒரு ஒழுங்கமைந்த சக்தியாக எழுந்து நின்றனர்.
1923ஆம் ஆண்டின் ரயில்வே வேலைநிறுத்தம், 1947ஆம் ஆண்டின் அரச சேவை வேலைநிறுத்தம் போன்ற தீர்க்கமான திருப்புமுனைகள், இந்நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மாற்றத்தின் முன்னோடிகள் உழைக்கும் மக்களே என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்தின.
அன்று தொட்டு இன்று வரை தோட்டத்துறை, துறைமுகம், ரயில்வே உள்ளிட்ட அனைத்து அரச மற்றும் தனியார் துறை தொழிலாளர்களும் ஆற்றிய பங்களிப்பு, இன்று நாம் அனுபவிக்கும் பல தொழில்சார் உரிமைகளுக்கு அடித்தளமாக அமைந்திருக்கின்றது என்பதைப் பெருமையுடன் நினைவுகூருகின்றேன்.
1886ஆம் ஆண்டு சிகாகோ நகரில் 8 மணித்தியால வேலை நேரக் கோரிக்கையுடன் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் உயிரைத் தியாகம் செய்த வீரமிக்க தொழிலாளர்கள் உள்ளிட்ட, உலகெங்கும் பரந்து வாழும் அனைத்து உழைக்கும்
மக்களுக்கும் எமது மரியாதையை செலுத்தி, இம்முறையும் சர்வதேச தொழிலாளர் தினத்தை கௌரவத்துடன் கொண்டாடுவதாக பிரதமர் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.














