பெரும்பான்மைக்குத் தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்த அரசியல் நிச்சயமற்ற நிலை நிலவி வரும் சூழ்நிலையில், தமிழகத்தில் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (TVK) ஆட்சி அமைப்பதற்கு திராவிட முன்னேற்ற கழகம் தடையாக இருக்காது என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆங்கில நாளிதழுக்கு அளித்த செவ்வியில் கூறியுள்ளதாவது,
தனிப்பெரும் கட்சியான தவெக ஆட்சியமைக்க திமுக இடையூறு செய்யாது.
விஜய் ஆட்சிக்கு ஆறு மாதங்களுக்கு எவ்வித இடையூறும் செய்யாமல் தொடர்ந்து கவனிப்போம்.
திமுக அரசின் திட்டங்களை தவெக தொடர வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.
மகளிருக்கு மாதம் ரூ.2,500 அளிப்பது கடினம்; திமுக அரசு வழங்கியது போன்று மாதம் ரூ.1,000 ஆவது வழங்க வேண்டும்.
ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் தருவதாக விஜய் வாக்குறுதி கொடுத்துள்ளார்.
அது சந்தேகம்தான்.. ஆனால் அதைச் செய்தால் மகிழ்ச்சி.
உடனடியாக தேர்தல் வருவதை திமுக விரும்பவில்லை.
அரசமைப்பு குழப்பம் ஏற்படுவதையும் திமுக விரும்பவில்லை.
திமுக நிர்வாகம் தனது 2021 தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் கிட்டத்தட்ட 90 சதவீதத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது – என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்ற தேர்தல் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது.
புதிய வரவான த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உள்ளது.
இதனையடுத்து தமிழக ஆளுநர் அர்லேகரை சந்தித்து விஜய் நேற்று மாலை ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
அப்போது அவர், த.வெ.க.வின் 108 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரசைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 113 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை வழங்கினார்.
ஆனால் அதை பெற்றுக்கொண்ட ஆளுநர், 118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை கொண்டு வந்தால்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதனால் விஜய் இன்று முதல்-அமைச்சராக பொறுப் பேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது.
இதற்கிடையே, விஜய்யால் ஆட்சி அமைக்க முடியாததால், தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க உள்ளதாக ஒரு தகவல் நேற்று இரவு காட்டுத்தீ போல் பரவியது. இதற்கு ஏற்றார்போல் இரு கட்சிகளும் தனித்தனியாக நேற்று பல மணி நேரம் ஆலோசனை நடத்தின.
இந்த தகவலுக்கு 2 கட்சிகளும் மறுப்பு தெரிவிக்காததால், இந்த தகவல் உண்மை என்றே அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.















