கனமழை காரணமாக முன்னதாக உயர்ந்திருந்த பல ஆற்றுப் படுகைகளில், கடந்த 24 மணி நேரத்தில் மழைப்பொழிவு குறைந்ததைத் தொடர்ந்து நீர்மட்டம் தற்போது குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மழைப்பொழிவு குறைந்ததன் காரணமாக, நீல்வலா ஆறு, ஜின் கங்கை, களு கங்கை மற்றும் அத்தனகல ஓயா போன்ற ஆற்றுப் படுகைகளில் தற்போது நீர்மட்டம் குறைந்து வருவதாக நீர்ப்பாசணத் திணைக்களத்தின் நீரியல் அனர்த்த முகாமைத்துவ மையத்தின் நீர்ப்பாசனப் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார குறிப்பிட்டார்.
எனினும், வரும் நாட்களில் குறித்த ஆற்றுப் படுகைகளை அண்மித்த பகுதிகளில் மழைப் பொழவு அதிகம் பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
இதனால், தற்போதைய இந்த நீர்மட்டக் குறைவு தற்காலிகமானதாக இருக்கலாம் என்று அவர் எச்சரித்தார்.
இதனிடையே, நாட்டின் 73 பெரிய நீர்த்தேக்கங்களில் 18 தற்போது நிரம்பி வழிகின்றன, அதே நேரத்தில் 18 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் நீரை வெளியேற்றி வருகின்றன.













