கிரேட்டர் மான்செஸ்டர் (Greater Manchester) நகர முதல்வர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham), தொழிற்கட்சியின் (Labour Party) நாடாளுமன்ற இடைத்தேர்தல் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான அனுமதியை அக்கட்சியின் தேசிய செயற்குழு (NEC) வழங்கியுள்ளது.
இதன் மூலம் அவர் மீண்டும் பிரித்தானிய நாடாளுமன்றத்திற்குள் (Westminster) நுழைவதற்கான வழிவகை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட பர்ன்ஹாம் எடுத்த முயற்சியைத் தொழிற்கட்சியின் தலைமை தடுத்திருந்த நிலையில், தற்போது அவருக்குப் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள ‘மேக்கர்ஃபீல்ட்’ (Makerfield) தொகுதியின் வேட்பாளராக அவர் தேர்வு செய்யப்பட்டு, தேர்தலில் வெற்றிபெற்றால், தற்போதைய பிரதமர் கீர் ஸ்டார்மரை (Sir Keir Starmer) பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அடுத்த பிரதமராக அவர் உருவெடுக்கக் கூடும் என அரசியல் வட்டாரங்களில் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம், தற்போதைய பிரதமர் கீர் ஸ்டார்மர், பதவியிலிருந்து விலகக் கோரும் அழுத்தங்களைத் தொடர்ந்து நிராகரித்து வருகிறார்.
தனது பதவி விலகலுக்கான எந்தவொரு காலக்கெடுவையும் விதிக்க மறுத்துள்ள அவர், ஆண்டி பர்ன்ஹாம் அல்லது வேறு எவரிடமிருந்தும் வரும் சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்துப் பிரதமரின் ஆதரவாளரும், வீட்டுவசதி அமைச்சருமான ஸ்டீவ் ரீட் கருத்துத் தெரிவிக்கையில், “இது மிகவும் கடினமான ஒரு வாரம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நாம் இப்போது சற்று நிதானிக்க வேண்டும். இந்த வார இறுதியில் என்ன நடக்கிறது என்பதை ஆராய்ந்து, அடுத்த வாரம் மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் திரும்பி, எங்களை நம்பி வாக்களித்த நாட்டு மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.














