தாய்வானுக்கு அதிநவீன ஆயுதங்களை விற்பனை செய்வது தொடர்பான விவகாரத்தில், அமெரிக்கா இன்னும் உறுதியான இறுதி முடிவு எதையும் எடுக்கவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனாவில் மூன்று நாட்கள் மேற்கொண்ட உத்தியோகபூர்வ அரசுமுறைப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வழியில், ‘ஏர் ஃபோர்ஸ்-1’ (Air Force One) விசேட விமானத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
எனினும், இந்த விவகாரத்தில் விரைவில் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் பெய்ஜிங்கில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, தாய்வான் விவகாரம் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது.
இதன்போது, “தாய்வான் விவகாரத்தை அமெரிக்கா தவறாகக் கையாண்டால், அது இரு நாடுகளுக்கும் இடையே தேவையற்ற மோதலைத் தூண்டும்” என ஜனாதிபதி ஷி ஜின்பிங், டிரம்ப்பிடம் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இத்தகைய பின்னணியில், தாய்வான் தலைவருடன் தான் பேசவிருப்பதாக டிரம்ப் கூறியுள்ள அடுத்தகட்ட நகர்வு, சீனா-அமெரிக்கா உறவில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தலாம் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அதேபோல், உலகளாவிய ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஈரான் போர்ச் சூழல் குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக ஆலோசித்துள்ளனர்.














