ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதன் செயற்குழு உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததை அடுத்து, உள்நாட்டு கிரிக்கெட் நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக ஒன்பது உறுப்பினர்கள் கொண்ட இடைக்காலக் குழுவொன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே கடந்த ஏப்ரல் 29 அன்று நியமித்தார்.
முன்னாள் முதலீட்டு வங்கியாளரும், எதிர்க்கட்சி அரசியல்வாதியுமான எரான் விக்ரமரத்ன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த இடைக்காலக் குழுவில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் ரொஷான் மகாநாம ஆகியோரும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்குள் அவசியமான சீர்திருத்தங்களை மேற்கொள்வதே இந்த இடைக்காலக் குழுவின் முதன்மை நோக்கமாகும்.
அரசாங்கத்தின் இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, நிலைமைகளை ஆராய்வதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) உயர்மட்ட அதிகாரி ஒருவர் அடங்கிய ஐசிசி-யின் உயர்மட்டக் குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக பிடிஐ (PTI) செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஐசிசியின் பிரதித் தலைவர் இம்ரான் க்வாஜா (Imran Khwaja) நேற்று (15) இரவு இலங்கையை வந்தடைந்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து, ஐசிசியின் முக்கிய அதிகாரியும், பிசிசிஐ-யின் (BCCI) உயர்மட்டப் பொறுப்பில் உள்ளவருமான மற்றொரு அதிகாரி இன்று (16) இலங்கையை வந்தடையவுள்ளார்.
கிரிக்கெட் நிர்வாகங்களில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது என்பதில் ஐசிசி கடுமையான விதிகளைக் கொண்டுள்ள பின்னணியில், இந்த உயர்மட்டக் குழுவின் இலங்கை விஜயம் மற்றும் அவர்களது அடுத்தகட்ட நகர்வுகள் கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

















