ஒருநாள் சர்வதேசக் கிரிக்கெட் (ODI) வரலாற்றில் 5000-வது போட்டி நேற்று (7) நடைபெற்று புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
ஸ்காட்லாந்து மற்றும் கனடா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில், ஸ்காட்லாந்து அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து நிர்ணயித்த 282 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய கனடா அணி, 273 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
வரலாற்றின் முதல் ஒருநாள் போட்டி 1971 ஜனவரி 5 அன்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
அதில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
அன்றிலிருந்து தொடங்கும் இந்த ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய அணியாக இந்தியா முதலிடத்தில் உள்ளது.
1974 முதல் 2026 வரை இந்தியா 1,081 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 575 வெற்றிகளையும் 452 தோல்விகளையும் பதிவிட்டுள்ளது.
இந்தியாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா (1,025) மற்றும் பாகிஸ்தான் (1,002) ஆகிய அணிகளும் 1,000 ஒருநாள் போட்டிகள் என்ற மைல்கல்லைக் கடந்துள்ளன.
1975-ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று வரும் இலங்கை அணி, இதுவரை 945 போட்டிகளில் விளையாடி 436 வெற்றிகளையும் 481 தோல்விகளையும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

















