வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா இன்றைய தினம் மிக சிறப்பாக நடைபெற்றது
கடந்த 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவம் தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று இன்றைய தினம் தேர்த்திருவிழா இடம்பெற்றது.
காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , பிள்ளையார் , முருகன் சமேதரராய் உள் வீதி உலா வந்த நாகபூசணி அம்மன் , காலை 08.30 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.
இன்றைய தேர்திருவிழாவின் போது பக்தர்கள் காவடி எடுத்து , தீச்சட்டி ஏந்தி , அங்க பிரதட்சணை செய்தும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினார்கள்.
நாளைய தினம் திங்கட்கிழமை காலை தீர்த்த திருவிழா நடைபெற்று மாலை கொடியிறக்கம் இடம்பெறும்.
அதேவேளை மகோற்சவ திருவிழாவின் இறுதி நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தரவுள்ளமையால் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் அதிகாலை 05 மணி முதல் இரவு 10 மணி வரையில் படகு சேவைகள் இடம்பெறும் என மாவட்ட செயலர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.













