மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்திடமிருந்து (CBFC) சான்றிதழ் பெறுவதற்கு முன்பே, ஏப்ரல் 9 ஆம் திகதி கசிந்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் சட்டவிரோதமாக 1.2 கோடி பேரால் பார்க்கப்பட்டதாகச் சென்னை காவல்துறை இன்று (02) சென்னை மேல் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
‘ஜனநாயகன்’ திரைப்படக் கசிவு தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில் இருவர் தாக்கல் செய்திருந்த பிணை மனுக்கள் மீதான விசாரணையின்போது இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.
‘தி இந்து’ நாளிதழ் செய்தியின்படி, நடைபெற்று வரும் விசாரணையில் சாட்சியங்களைச் சிதைத்தது தொடர்பான குற்றச்சாட்டுகளின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, நான்காவது குற்றவாளியான எஸ்.ரஜினி மற்றும் 11-வது குற்றவாளியான ஜெயப்பிரகாஷ் ஆகியோருக்கு பிணை வழங்க நீதிபதி சி. குமாரப்பன் மறுத்துவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, அவர்களின் பிணை மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
குற்றச்சாட்டின்படி, சுயாதீனத் திரைப்படத் தொகுப்பாளரான முதன்மைக் குற்றவாளி, படத்தொகுப்பு அறையிலிருந்து ஹார்ட் டிரைவ் ஒன்றைப் பயன்படுத்தி அப்படத்தின் காட்சிகளைத் திருடியதாகக் கூறப்படுகிறது.
அவரும் அவரது சகோதரர்கள் இருவருமாகச் சேர்ந்து, துண்டு துண்டாக இருந்த அக்காட்சிகளை ஒன்றிணைத்து முழு நீளப் படமாக மாற்றி, அதை கூகுள் டிரைவில் (Google Drive) பதிவேற்றியதாகப் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்பே லட்சக்கணக்கானோர் அதைப் பார்க்கும் வகையில், ‘தமிழ் ராக்கர்ஸ்’ (Tamil Rockers) உள்ளிட்ட இணையதளங்களில் அதன் திருட்டுப் பிரதி பரப்பப்பட்டதாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டியது.
மேலும், திரைப்படத்தின் அங்கீகரிக்கப்படாத வெளியீட்டைத் தடுக்குமாறு இணையச் சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடும் இடைக்காலத் தடையுத்தரவை, இப்படத்தைத் தயாரித்த ‘கேவிஎன் புரொடக்ஷன்ஸ்’ (KVN Productions) நிறுவனம் சென்னை மேல் நீதிமன்றத்திடமிருந்து பெற்றிருந்ததாகவும் அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
அந்த முயற்சிகள் இருந்தபோதிலும், கசிந்த திரைப்படத்தின் பதிப்பு நீக்கப்படுவதற்கு முன்பே கிட்டத்தட்ட 1.2 கோடி பார்வையாளர்கள் அதைப் பார்த்திருந்ததாக அதிகாரிகள் மதிப்பிட்டனர்.
பிணையை எதிர்த்த அரசுத் தரப்பு, குற்றம் சாட்டப்பட்ட இருவர் இன்னும் தலைமறைவாக இருப்பதாகவும், இந்தத் திருட்டு வலையமைப்பின் நிதிப் பின்னணியைக் கண்டறிய காவலில் வைத்து விசாரணை செய்வது அவசியம் என்றும் கூறியது.
குற்றஞ்சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட்டால், அவர் ஆதாரங்களைச் சிதைக்கவோ அல்லது சாட்சிகளைத் தன்வசப்படுத்தவோ வாய்ப்புள்ளதாகத் தங்களுக்குக் கவலை இருப்பதாக அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
மேலும், இதுவரை முதற்கட்டக் குற்றப்பத்திரிகை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இறுதிக்குற்றப்பத்திரிகையைச் சமர்ப்பிப்பதற்கு முன்னரான விசாரணை இன்னும் நடைபெற்று வருவதாகவும் அது குறிப்பிட்டது.
ஜனவரி 9-ஆம் திகதி வெளியாகவிருந்த ‘ஜன நாயகன்’ திரைப்படம், தணிக்கைக் குழுவின் ஒப்புதலுக்காக இன்னும் காத்திருக்கிறது; மேலும், இப்படத்தின் தயாரிப்பாளர்கள் புதிய வெளியீட்டுத் திகதியை இன்னும் அறிவிக்கவில்லை.
















