இலங்கையில் வேகமாகப் பரவி வரும் டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ‘வோல்பெக்கியா’ (Wolbachia) பாக்டீரியா உட்செலுத்தப்பட்ட கொசுக்களைச் சூழலில் விடுவிக்கும் விசேட திட்டத்தைச் சுகாதார அமைச்சுடன் இணைந்து கொழும்பு மாநகர சபை முன்னெடுக்கவுள்ளது.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் 11 பில்லியன் ரூபாய் (1,100 கோடி) நிதி உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகக் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினரும் வட கொழும்பு பிரஜா சக்தி திட்டத்தின் தலைவருமான எஸ். ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
டெங்குவை பரப்பும் ‘ஈடிஸ் எஜிப்ட்’ ரக கொசுக்களின் முட்டைகளுக்குள் வோல்பெக்கியா பாக்டீரியாவைச் செலுத்துவதன் மூலம், கொசுக்களுக்குள் வைரஸ் பெருகவது தடுக்கப்பட்டு மனிதர்களுக்கு நோய் பரவும் அபாயம் முழுமையாகக் குறைகிறது.
இத்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக வெள்ளவத்தையில் பிரத்யேக ஆய்வகம் ஒன்று நிறுவப்பட்டுச் சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆய்வகங்களில் வளர்க்கப்படும் இந்த பாக்டீரியா கொண்ட கொசுக்கள் டெங்கு அபாயம் அதிகமுள்ள பகுதிகளில் விடுவிக்கப்பட்டு, அவை சாதாரண கொசுக்களுடன் இனப்பெருக்கம் செய்வதன் மூலம் பாதுகாப்பான கொசுக்களின் எண்ணிக்கை இயற்கையாகவே அதிகரிக்கப்படும்.
நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை நெருங்கி வரும் பின்னணியில், கொழும்பு மற்றும் நுகேகொட ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட சோதனைகள் வெற்றியளித்துள்ளன.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் வழிகாட்டலில் கொழும்பு மாநகர சபை மேயர் விராய் கெலி பல்சதார் தலைமையிலான உறுப்பினர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இணைந்து டெங்கு பெருக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.







