உங்களுடைய பிள்ளைகளின் தலைமுடியைத் திருத்த உங்களால் முடியுமா? நிலாந்தன்!
அண்மையில் தமிழக அரசினால் வெளியிடப்பட்ட ஒரு வழிகாட்டல் விளம்பரம் சமூக ஊடக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. அதில் பாடசாலை மாணவர்கள் தங்கள் தலைமுடியை எப்படி வெட்ட வேண்டும்;எப்படி வெட்டக்கூடாது;எப்படி வளர்க்ககூடாது? என்று அறிவுறுத்தல்களை வழங்கும் ஒளிப்படங்கள் தொகுக்கப்பட்டிருந்தன.
அதுபோன்ற அறிவுறுத்தல்களை அண்மை மாதங்களாக தமிழ்ப் பகுதிகளில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் முடி திருத்தும் நிலையங்களுக்கு வழங்குவதை செய்திகளில் பார்க்கக் கிடைத்தது.அதாவது பாடசாலை மாணவர்களுக்கு எப்படி முடி திருத்த வேண்டும் என்று அறிவுறுத்தல்களை மாநகர சபைகளும் பிரதேச சபைகளும் சலூன்களுக்கு வழங்குவதான செய்திகளை ஊடகங்களில் பார்க்கக் கிடைத்தது.
தனது பாடசாலையில் படிக்கும் மாணவன் எப்படி தன் தலைமுடியை அலங்கரித்துக் கொள்ளலாம் என்பதனை பாடசாலை நிர்வாகம் தீர்மானிக்கும். அதை பெற்றோருக்கு அறிவிக்கும்.அதனை அமுல்படுத்த வேண்டியது பெற்றோரின் வேலை. பெற்றோரின் பொறுப்பு.அது பாடசாலையின் வேலை அல்ல.ஆனால் நடைமுறையில் அப்படியல்ல.பல பாடசாலைகளில் அறிவுறுத்தப்பட்டதற்கு முரணாக முடி வளர்த்திருக்கும் மாணவர்களை ஆசிரியர்களே முடி திருத்தும் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று அந்த முடியைத் திருத்திய பின்,கட்டணத்தைச் செலுத்திவிட்டு,பின்னர் பெற்றோரிடமிருந்து அந்தக் கட்டணத்தை அளவிடுகிறார்கள். சில சமயங்களில் பிள்ளைகளைத் துரத்தி விடுவதுமுண்டு.
ஒரு பிள்ளையின் தலைமுடி எப்படி இருக்க வேண்டும் என்பதனை முதலாவதாக தீர்மானிக்க வேண்டியது பெற்றோர்தான்.பள்ளிக்கூடம் சொன்னபடி பிள்ளையின் தலை முடியை திருத்த வேண்டியது பெற்றோரின் பொறுப்பு; பெற்றோரின் வேலை.ஆனால் அதைப் பெற்றோர்கள் செய்யத் தவறும் இடத்தில் பிரதேச சபை முடி திருத்தும் நிலையங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டிய வருகிறது.
யாழ்ப்பாணத்தின் முன்னணி ஆண் பள்ளிக்கூடம் ஒன்றில் மாணவர் ஒருவர் தலைமுடியை அதிகமாக வளர்த்துக் கொண்டு வந்த காரணத்தால் ஆசிரியர் அவரை சலூனுக்கு அனுப்பி முடியை வெட்டச் செய்தார். அதன்பின் அது தொடர்பாக அந்த மாணவனின் பெற்றோருக்கும் அறிவிக்கப்பட்டது.ஆனால் அடுத்த நாள் காலை அந்த மாணவனின் தந்தை வீதியில் நின்றபடி அதிபர் அலுவலகத்திற்கு கேட்கக்கூடிய குரலில் உரத்தைச் சொன்னாராம்,”நான் பிள்ளையை பள்ளிக்கூடத்துக்கு விட்டது படிக்கத்தான்,தலைமுடி வெட்டுவதற்கு அல்ல” என்று. அந்த அதிபர் அந்தப் பிள்ளையை அதோடு பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே அனுப்பி விட்டார்.
இது வெறும் தலைமுடி விவகாரம் அல்ல. ஒரு தலைமுறையின் மீது மூத்த தலைமுறையின் கட்டுப்பாடு எப்படி இருக்கிறது என்பதைக் காட்டும் ஒரு விடயம்.வீடுகளில் பெற்றோரின் முகாமைத்துவ ஆற்றல்,தலைமைத்துவ பண்பு கேள்விக்குள்ளாகிறது என்பதனை அது காட்டுகிறது.பெற்றோர் பிள்ளைகளைத் திருத்த முடியாத இடத்தில் பள்ளிக்கூடமும் சலூனும் பிரதேச சபையும் அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கிறது.
இது நமது சமூகத்தின் தற்போதுள்ள நிலைமையைக் காட்டும் ஒரு குறிகாட்டி. இதுபோன்ற பல உதாரணங்களை இங்கு சுட்டிக்காட்ட முடியும்.
நமது உள்ளூர் கோவில்களில் திருவிழாக்களில் சாமி தூக்குவதற்கு இளைஞர்கள் இல்லை என்றும்,அதனால் பெரும்பாலான உள்ளூர் கோவில்கள் தங்களுக்கென்று சகடை என்று அழைக்கப்படும் நான்கு சில்லு பொருத்தப்பட்ட, மரத்தாலும் இரும்பாலுமான, தள்ளிச் செலுத்தப்படும் ஒரு வாகனத்தை தயார்படுத்தி வைத்திருப்பதாகவும் செய்திகள் வரக் கண்டிருப்பீர்கள். ஆனால் அவ்வாறு உள்ளூர்க் கோவில்களில் சாமி தூக்க வராத இளையவர்களை அதே கோவிலில் இரவில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளில் காணலாம்.
உள்ளூரில் ஒரு பகுதி கோவில்களில் திருவிழாவின் பின்னிரவில், இசை நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்படுகின்றன.தமிழகத்திலிருந்து “சரிகமப” கலைஞர்கள் பெரிய தொகை காசு கொடுத்து அழைத்து வரப்படுகிறார்கள். இவர்களோடு உள்ளூர்ப் பாடகர்களும் உள்ளூர் இசைக் கலைஞர்களும் இணைகிறார்கள்.இந்த நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் பக்திப் பாடல்கள் பாடப்படும்.அதன்பின் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வேர்களைக் கொண்ட சுசீலா ராமனின் பாடல்கள் இசைக்கப்படும்.சுசீலா ராமன் முருக பக்திப் பாடல்களை “ரப்” பண்புடையதாக ரீமேக் செய்து பாடுவார்.அந்தப் பாடல்களுக்குத் துள்ளிசைப் பண்பு உண்டு.எனவே ஆடலாம்.நமது இளைஞர்கள் மேடைக்கு முன்னே நின்றபடி ஆடத் தொடங்குவார்கள். தொடர்ந்து படிப்படியாக சினிமாப் பாடல்கள் இசைக்கப்படும்.ஆட்டம் பாட்டம் கொண்டாட்டந்தான். ஆடட்டும்;பாடட்டும்;துள்ளட்டும்;குதிக்கட்டும்; வாழ்க்கையை அனுபவிக்கட்டும்.ஆனால் அதே கோவிலில் சாமி தூக்கும்போது அந்த இளைஞர்கள் எங்கே போனார்கள்?
மேற்கண்ட இரண்டு உதாரணங்களைப்போல ஏராளம் உதாரணங்களை இங்கு சுட்டிக்காட்டலாம். கட்டுரையின் சுருக்கம்கருதி அவற்றைத் தவிர்க்கிறேன். ஆனால் ஒரு தலைமுறையானது மூத்தவர்களின் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக இல்லை என்பது மட்டுமல்ல, அது மூத்தவர்களின் அரசியலில் இருந்தும் விலகிச் செல்கிறதா? என்ற கேள்விக்கு இங்கு விடை முக்கியம்.
பல மாதங்களுக்கு முன்பு ஒரு தூதரகத்துடனான சந்திப்பின்போது, யாழ்ப்பாணத்தின் முக்கிய மருத்துவத்துறை முதலீட்டாளர் ஒருவர் என்னிடம் கேட்டார்,”என்னுடைய பிள்ளை விரும்பிப் பார்க்கும் “ரீல்ஸ்”களுக்குள் எங்களுடைய தமிழ்த் தேசிய உரையாடல் எவையும் இல்லை.தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் யாரும் இல்லை.அனுரதான் நிற்கிறார்” என்று.அது உண்மை.தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒருவர் மற்றவரைத் திட்டிக் கொண்டும், ஒருவர் மற்றவரை துரோகியாக்கிக் கொண்டும்,ஒருவர் மற்றவரைக் குற்றவாளியாக்கிக் கொண்டும் அரசியல் நடத்தும் ஒரு களத்தில்,தென்னிலங்கையில் இருந்து அனுர ரீல்ஸ்களின் கதாநாயகனாக இறக்கப்படுகிறார்.
தமிழ்த் தேசிய அரசியலில் யாரும் யாரையும் அங்கீகரிக்கத் தயாரில்லை. ஒரு கட்சியின் தலைவரை அந்த கட்சித் தொண்டர்கள் கதாநாயகராகக் கொண்டாடினால்,எதிர்க்கட்சி அவரை எப்படி வில்லனாக்களாம் என்று சிந்தித்து மீம்ஸ்களைத் தயாரிக்கும்.தமிழ் சமூக ஊடக வலைத்தளச் சூழல் என்பது அதிக toxic ஆனதாக நோய்க்கூறானதாக ஏன் பல சமயங்களில் நச்சுத்தன்மை மிக்கதாக மாறி வருகிறது.
நமது இளையவர்கள் அந்த சமூக ஊடக வலைத்தள சூழலுக்குள்தான் நாளும் பொழுதும் உலாவுகிறார்கள்.அவர்கள் கைபேசிகளில் பார்க்கின்ற, கேட்கின்ற ரசிக்கின்ற விடயங்களுக்குள் பொழுதுபோக்கு அம்சங்கள்தான் அதிகம். கருத்துருவாக்க அம்சங்கள் மிகக் குறைவு.
அண்மையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கல்வி பயிலும் ஒரு நிலையத்தில் 20 பேரை எடுத்து அவர்களிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. “நீங்கள் கைபேசியோடு எத்தனை மணித்தியாலங்களை செலவழிப்பீர்கள்?” பெரும்பாலானவர்கள் சொன்னார்கள் “குறைந்தது ஒரு மணித்தியாலம்.கூடியது 5 மணித்தியாலம்”என்று.”அதில் எதையெதை தொடர்ச்சியாகப் பார்ப்பீர்கள்” என்று கேட்டபோது,பெரும்பாலானவர்கள் சொன்னார்கள்”பாட்டுக்களை” என்று. சிலர் சொன்னார்கள்”படிப்போடு சம்பந்தப்பட்ட விடயங்களை”என்று. அவ்வாறு சொன்னவர்களிடம் திரும்பிக் கேட்கப்பட்டது “யாருடைய பாடல்களை அதிகமாக பார்ப்பீர்கள்? “அனிருத்தின் பாடல்களை” என்று சொன்னார்கள். “அதில் உங்களுக்கு பிடித்த ஒரு பாட்டைச் சொல்லுங்கள்?” யாராலும் ஒரு பாட்டைக் கூட சொல்ல முடியவில்லை.”அப்படியென்றால் எதை நீங்கள் பார்க்கிறீர்களோ அதைக் கூர்ந்து பார்ப்பதில்லையா?ஆழமாகப் பார்ப்பதில்லையா?” என்று கேட்டபோது,அவர்கள் பதில் சொல்லவில்லை. கல்வித் தேவைக்காக கைபேசியைப் பயன்படுத்துகிறார்கள் கிட்டத்தட்ட அரை மணித்தியாலம் அதற்காகப் பயன்படுத்துவதாகச் சொன்னார்கள்.மிஞ்சிய நேரத்தில் அவர்களும் பொழுதைப் போக்குகிறார்கள்.
ஆம் அதுதான் உண்மை.கைபேசியின் கைதிகளாக உள்ள பலரும் தாங்கள் பார்ப்பதை உற்று,ஆழமாகப் பார்ப்பது அல்லது கூர்ந்து பார்ப்பது குறைவு. மிகக்குறைவானவர்கள்தான் அப்படிப் பார்க்கிறார்கள்.பெரும்பாலானவர்கள் சும்மா பார்க்கிறார்கள்;ஸ்க்ரோல் பண்ணிக் கடக்கிறார்கள்.அவர்கள் தொடக்கத்தில் எதைப் பார்க்கிறார்களோ,அதுதான் அவர்கள் பின்னர் எதைப் பார்க்கவேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றது.அது தன் வழியில் அவர்களை அழைத்துச்செல்கிறது அல்லது இழுத்துச்செல்கிறது.ஆங்கிலச் சிறுவர் கதைகளில் வந்த பய் பைப்பர் தன் இசையால் எலிகளையும் சிறுவர்களையும் பள்ளத்தாக்கை நோக்கி அழைத்துச் சென்றதுபோல.
இது ஆபத்தான வளர்ச்சி.முதலாவதாக அது நேரத்தைத் தின்கிறது. இரண்டாவதாக அது கண்ணைத் தின்கிறது.மூன்றாவதாக அது மூளையைத் தின்கிறது. எதையும் கூர்ந்து கவனிக்காத, எதிலும் ஆழமாக, தியானம்போல ஈடுபடாத ஒரு போக்கு அதிகரித்து வருகிறது.
இவ்வாறு கைபேசிகளின் கைதிகளாக அல்லது பொழுது போக்கிகளாகக் காணப்படும் இளையோர் மத்தியில் இலட்சியவாதத்தைக் கருத்துருவாக்கம் செய்ய நமது தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளால் முடியவில்லையா ? தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளிடம் இளையோர் அமைப்புக்கள் உண்டா? பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் எங்கள் கட்சிகளுக்கு பலமான இளையோர் அமைப்புகள் உண்டா? உள்ளூரில் நடக்கும் அரசியல் சந்திப்புகளில் பெரும்பாலும் நடுத்தர வயதுக்காரர்களையும் வயது போனவர்களையும்தான் காணமுடிகிறது. அங்கெல்லாம் எத்தனை இளையோர் வருகிறார்கள்? அவ்வாறு வரக்கூடிய இளையவர்களை ஆழமாக ஆராய்ந்தால் அவர்களுடைய குடும்ப பின்னணிதான் அவர்களை அங்கே கொண்டு வந்து விடுகிறது.பெரும்பாலும் அவர்களுடைய பெற்றோர் அல்லது அவர்கள் மதிக்கும் முதியோர் அல்லது ஆசிரியர்கள் அவர்களை அவ்வாறு வழிநடத்தி அங்கே அனுப்புகிறார்கள்.
எனவே தனது பிள்ளையின் தலைமுடியை எப்படி வெட்ட வேண்டும் என்பதனை தீர்மானிக்கும் சக்தியை ஒரு பகுதி பெற்றோர் இழந்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் இலட்சியவாதப் பண்புமிக்க அரசியலை எப்படி முன்னெடுப்பது யார்? முன்னெடுப்பது ?






