பெரு நாட்டின் ஆண்டிஸ் பகுதியில் ஏற்பட்ட 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர்.
மேலும் இந்த அனர்த்தத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுடன், 300 பேர் இடம்பெயர்ந்தனர் என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (19) தெரிவித்தனர்.
உள்ளூர் நேரப்படி, சனிக்கிழமை இரவு 9:24 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ஹுவான்காயோ (Huancayo) மாகாணத்தில் உள்ள சிகாயா (Sicaya) நகருக்கு மேற்கே-தென்மேற்கே 2 கிலோமீட்டர் (1.24 மைல்) தொலைவில் மையங்கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது 10 கிலோமீட்டர் (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தில் காணாமல் போனவர்களின் மொத்த எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை என்று பெருவின் தேசிய சிவில் பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன அல்லது கட்டமைப்பு ரீதியான சேதங்களுக்கு உள்ளாகின.
இவற்றில் சோங்கோஸ் பாஜோவில் (Chongos Bajo) அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க “சாண்டியாகோ டி லியோன்” (Santiago de León) தேவாலயம் மற்றும் முன்னாள் கன்னியர் மடம் ஆகியவையும் அடங்கும்.
1565-இல் கட்டப்பட்ட இக்கட்டிடம், 16-ஆம் நூற்றாண்டின் “கட்டிடக்கலைச் சிறப்புமிக்க பொக்கிஷம்” என்பதால் தேசிய பாரம்பரியச் சின்னமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடலின் “நெருப்பு வளையம்” (Ring of Fire) என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள பெரு நாட்டில் நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.
2007-ல், பெருவின் இகா பிராந்தியத்தில் உள்ள பிஸ்கோ மாகாணத்தை 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதில், கிட்டத்தட்ட 600 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.















