லண்டன், லோர்ட்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) இரவு நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், பென் டக்கெட் சாதனை படைக்கும் வகையில் எடுத்த 141 ஓட்டங்கள் இங்கிலாந்து அணி இந்தியாவை 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வழிவகுத்தது.
இதன் மூலம் இங்கிலாந்து அணி, இந்தியாவுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.
31 வயதான இங்கிலந்து அணி தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட்டின் இந்த இன்னிங்ஸ் ஆட்டம், லோர்ட்ஸில் நடந்த எந்தவொரு ஆடவர் ஒருநாள் போட்டியிலும் பதிவான அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையாகும்.
இது, 1979 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகளின் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் எடுத்திருந்த 138 ஓட்டங்களை முறியடித்தது.

நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் எடுத்த 387 ஓட்டங்கள் (3 விக்கெட் இழப்புக்கு) அந்த மைதானத்தில் ஒரு ஒருநாள் போட்டியில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும் அமைந்தது.
இது, 1975 இல் நடைபெற்ற முதல் உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 60 ஓவர்களில் அந்த அணி எடுத்த 334 ஓட்டங்களையும் (4 விக்கெட் இழப்புக்கு) முறியடித்தது.
சேஸிங்கில் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா அபாரமாக 138 ஓட்டங்களை குவித்தபோது, 388 என்ற மிகப்பெரிய இலக்கை எட்டிப்பிடிக்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு இருந்தது.
அவர் இந்திய அணித் தலைவர் ஷுப்மன் கில்லுடன் (77) 147 ஓட்டங்களும், விராட் கோலியுடன் (74) 113 ஓட்டங்களும் கொண்ட இணைப்பாட்டங்களை அமைத்தார்.

ஆனால், ஜேக்கப் பெதெல்லின் பந்துவீச்சில் ரோஹத் சர்மா ஆட்டமிழந்து வெளியேறியபோது (அப்போது அணியின் ஓட்ட எண்ணிக்கை 2 விக்கெட் இழப்புக்கு 260 ஓட்டங்கள்), இந்தியாவின் வெற்றி வாய்ப்புகள் மங்கி மறைந்தன.
அதிக ரன்-ரேட் தேவைப்பட்ட சூழலில் இந்தியாவின் ஆட்டம் சரிவைச் சந்தித்தது.
சாம் கரன் 75 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 360 ஓட்டங்களுடன் தனது ஆட்டத்தை நிறைவு செய்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை பர்மிங்காமில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி, வியாழக்கிழமை கார்டிப்பில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.
பின்னர் தலைநகரில் நடந்த இந்த ஆட்டத்துடன் 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
முன்னதாக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி:20 தொடரையும் இங்கிலாந்து 4:0 என்ற (ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது) கணக்கில் கைப்பற்றி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சுருக்கமான விவரம்
இங்கிலாந்து 387-3, 50 ஓவர்கள் ( பென் டக்கெட் 141 ஓட்டம், ஜே. பெத்தல் 91 ஓட்டம், ஜே. ரூட் 74 ஓட்டம்)
இந்தியா 360-7, 50 ஓவர்கள் ( ரோஹித் சர்மா 138 ஓட்டம், ஷுப்மன் கில் 77 ஓட்டம், விராட் கோலி 74 ஓட்டம்; சாம் கர்ரன் 4 விக்கெட்டுகள்)
முடிவு: இங்கிலாந்து 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
ஆட்டநாயகன்: ஜேக்கப் பெத்தல்
தொடரின் நாயகன்: ஜோ ரூட்
தொடர்: மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் வென்றது












