மீண்டும் தொடங்கியுள்ள மோதலில் உயிரிழந்த அமெரிக்க இராணுவத்தினரின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்ததோடு, ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து குறித்த கவலைகளும் அதிகரித்துள்ள நிலையில், திங்கட்கிழமையன்று (20) தொடர்ந்து ஒன்பதாவது நாளாக ஈரான் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தின.
அந்த நீரிணையின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் ஈரானின் திறனைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட புதிய சுற்றுத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மத்திய கட்டளை மையத்தின் அறிவிப்பில் மேலதிக விவரங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை.
ஆனால், ஈரானின் பகுதி அதிகாரப்பூர்வமான தஸ்னிம் செய்தி நிறுவனம், தனது செய்தியாளர்களை மேற்கோள் காட்டி, திங்கள்கிழமை அதிகாலையில் பல ஈரானிய நகரங்கள் மீது அமெரிக்க ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளது.
அண்மைய உயிரிழப்பு அறிவிப்புகளின்படி, போர் தொடங்கியதிலிருந்து கொல்லப்பட்ட அமெரிக்க இராணுவ வீரர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 420-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதற்கிடையில், “சிரியாவின் அல்-தன்ஃப் (Al-Tanf) பகுதியில் உள்ள எதிரியின் சிறப்பு நடவடிக்கைகளுக்கான தலைமையகம்” மீது திடீர் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) அறிவித்தது.
குவைத்தில் உள்ள அல்-அதிரி (Al-Adiri) முகாம் மற்றும் அலி அல்-சலீம் (Ali Al Salem) விமானப்படைத் தளம் ஆகியவற்றில் உள்ள அமெரிக்க இராணுவ சொத்துக்கள் மற்றும் உபகரணங்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ஞாயிற்றுக்கிழமை (19) அதிகாலையில் அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.
வளைகுடாப் பகுதியில் உள்ள அமெரிக்க சொத்துக்கள் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக கடந்த ஒரு வாரமாக ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களின் ஒரு பகுதியாக, ஏற்கனவே இந்த இரண்டு தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியிருந்தது.
முக்கியமான பொதுமக்களுக்கான உள்கட்டமைப்பு வசதி மீது நடத்தப்பட்ட நேரடித் தாக்குதல் என்று வர்ணிக்கப்பட்ட சம்பவத்தில், தொடர்ந்து இரண்டாவது நாளாக கடல்நீரை நன்னீராக்கும் நிலையம் (desalination plant) தாக்கப்பட்டதாகவும், அதனால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் குவைத் அரசு தெரிவித்தது.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை இரு தரப்பும் மீண்டும் மீண்டும் மீறியதாகக் குற்றம் சாட்டிக்கொண்டு, அமெரிக்காவும் ஈரானும் பகிரங்க மோதலில் ஈடுபடத் தொடங்கியதிலிருந்து, ஹார்முஸ் நீரிணை வழியாக ஆற்றல் வள விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற கவலை தொடர்ந்து நீடிக்கிறது.














