டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கை அழைத்து வரப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரான லலித் கன்னங்கரவுக்கு (பஸ் லலித்) 72 மணிநேர தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் அவருக்கு உள்ளதாகக் கூறப்படும் தொடர்பு குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக இந்தத் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றவியல் விசாரணைகளின் மற்றுமொரு முக்கியமான வெற்றியாக, இலங்கையிலிருந்து தப்பிச் சென்று ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) தலைமறைவாகி வாழ்ந்து வந்த, இலங்கையில் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் லலித் கன்னங்கர எனும் ‘பஸ் லலித்’ என்ற சந்தேகநபர் இன்று (25) அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்காக இலங்கை பொலிஸாரினால் சர்வதேச பொலிஸின் ஊடாக சிவப்பு அறிவித்தல் (Red Notice) வெளியிடப்பட்டிருந்தது.
அதற்கமைய, அரச புலனாய்வுச் சேவை (SIS), குற்றவியல் விசாரணைத் திணைக்களம் (CID) மற்றும் மத்திய குற்ற விசாரணைப் பணியகம் (CCIB) ஆகியன இணைந்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் புலனாய்வுப் பிரிவு மற்றும் துபாய் பொலிஸாருடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் மேற்கொண்ட நடவடிக்கையின் பிரதிபலனாக, குறித்த சந்தேகநபர் 2025 ஒக்டோபர் மாதத்தில் துபாயில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டதன் பின்னர் சந்தேகநபரை விரைவாக இலங்கைக்கு அழைத்து வருவதற்காக, இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையில் காணப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MOU) அடிப்படையில், உரிய ஆவணங்கள் இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக ஐக்கிய அரபு இராச்சிய அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டன.
அதற்கமைய, இலங்கை பொலிஸ் மற்றும் அரச புலனாய்வுச் சேவை அதிகாரிகளைக் கொண்ட விசேட இலங்கை குழுவொன்று ஐக்கிய அரபு இராச்சியத்திற்குச் சென்று, சந்தேகநபரை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளது.
மேலதிக விசாரணைகள் மற்றும் தேவையான சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேகநபர் தற்போது மத்திய குற்ற விசாரணைப் பணியகத்திடம் (CCIB) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவுகளுக்கு இடையில் பேணப்பட்ட நெருக்கமான ஒருங்கிணைப்பும், சந்தேகநபரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு ஐக்கிய அரபு இராச்சிய அதிகாரிகள் மற்றும் துபாய் பொலிஸார் வழங்கிய பாராட்டத்தக்க ஒத்துழைப்பும், சந்தேகநபரை வெற்றிகரமாக இலங்கைக்கு அழைத்து வருவதற்கு பெரிதும் உதவியுள்ளன.
இந்த முழு செயற்பாட்டின்போதும் வழங்கிய ஒத்துழைப்புக்காக, இலங்கை அரசாங்கமும் இலங்கை பொலிஸாரும் ஐக்கிய அரபு இராச்சிய அதிகாரிகளுக்கு தமது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தேகநபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள்.
- 2013.09.16 அன்று ஹங்வெல்ல பொலிஸ் பிரிவில் நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியமை.
- 2021 ஆம் ஆண்டு, நெலுவத்துடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்குள் பிரவேசித்து, லொறி ஒன்றிற்கு தீ வைத்து சேதப்படுத்தியமை.
- 2021 ஆம் ஆண்டு, நெலுவத்துடுவ பிரதேசத்தில் மேற்குறிப்பிட்ட வர்த்தகரின் வீட்டிற்கு முன்னால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு நபர் ஒருவரை படுகாயங்களுக்கு உட்படுத்தியதிடன், அவரைக் கொலை செய்ய முயற்சித்தமை. (அச்சுறுத்தி பணம் பெற முயற்சித்ததுடன், பணம் வழங்கப்படாத காரணத்தினால்.)
- 2022.10.16 அன்று ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிலுள்ள வீடொன்றுக்குள் பிரவேசித்து மூன்று நபர்களை வெட்டிக் காயப்படுத்தி படுகாயம் ஏற்படுத்தியமை.
- 2022.12.18 அன்று ஹரஸ் பார, ஹங்வெல்ல பிரதேசத்தில் நபர் ஒருவரை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு படுகொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த்துடன், இக் கொலைக்கு சதி செய்தமை தொடர்பில். (அவிசாவளை கௌரவ நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.)
- 2023.12.25 அன்று பாதுக்க பொலிஸ் பிரிவில் இரு நபர்களை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்தமை.
- 2024.03.04 அன்று ஹங்வெல்ல பொலிஸ் பிரிவில் நபர் ஒருவரை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்தமை.
- 2024.09.30 அன்று நெலுவத்துடுவ பிரதேசத்தில் வசித்து வந்த வர்த்தகர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தமை.
- 2025.07.06 அன்று கொஸ்கம பொலிஸ் பிரிவில் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த மூன்று நபர்களை துப்பாக்கி பிரயோகத்தினால் காயப்படுத்தியமை.
- 2025.07.19 அன்று கொள்ளுப்பிட்டிய பொலிஸ் பிரிவில் சமூகக் கழகமொன்றிற்கு அருகில் கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட T-56 ரக துப்பாக்கி மற்றும் 25 தோட்டாக்களை குறித்த நபருக்கு வழங்கியமை.
- 2025.08.12 அன்று மீகொட பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை துப்பாக்கி பிரயோகத்தினால் கொலை செய்தமை.
- 2025.08.13 அன்று மீகொட பொலிஸ் பிரிவின் முதுஹேன வீதியிலுள்ள இடமொன்றில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்ற சம்பவத்தை வழிநடத்தியமை.
சந்தேகநபரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போதைப்பொருள் வர்த்தகம், ஏனைய திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.















