இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின்போது நிகழ்ந்த ஒரு சம்பவத்திற்காக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூரிய சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தினால் (ICC) எச்சரிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் இப்போட்டியில் ஒழுங்கு நடவடிக்கை அல்லது தண்டனைக்குள்ளான மூன்றாவது வீரராக அவர் ஆகியுள்ளார்.
தனது அணியின் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து அவருக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சர்வதேசப் போட்டியின்போது கிரிக்கெட் உபகரணங்கள் அல்லது ஆடைகள், மைதான உபகரணங்கள் அல்லது அங்குள்ள சாதனங்கள் மற்றும் அமைப்புகளைத் தவறாகக் கையாள்வது தொடர்பான, வீரர்கள் மற்றும் வீரர்களுக்கான ஆதரவுக் குழுவினருக்கான ஐசிசி நடத்தை விதிகளின் பிரிவு 2.2-ஐ ஜெயசூர்யா மீறியது கண்டறியப்பட்டது.
24 மாத காலப்பகுதியில் இது அவரது முதல் மீறல் என்பதால், அவரது ஒழுங்கு நடவடிக்கை பதிவில் ஒரு குறைமதிப்பு புள்ளியும் (demerit point) சேர்க்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை ஆட்டத்தின் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்த ஜெயசூர்யா, பெவிலியனுக்குத் திரும்பும் வழியில் தனது துடுப்பாட்ட மட்டையால் எல்லைக் கோட்டுப் பலகைகளை (boundary wedges) அடித்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
இந்தப் போட்டியில் முதல் நாளில் நடந்த சம்பவத்திற்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் அசித ஃபெர்னாண்டோ ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐசிசி-யால் (ICC) தண்டனைக்குள்ளாகும் மூன்றாவது வீரராக இப்போது ஜெயசூர்யா மாறியுள்ளார்.
இந்தியாவின் முதல் இன்னிங்ஸின் 17 ஆவது ஓவரில், அசித ஃபெர்னாண்டோ பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
அப்போது இந்திய துடுப்பாட்ட வீரர், அசித ஃபெர்னாண்டோவை நோக்கி நடந்து சென்றார்; இருவருக்கும் இடையே வார்த்தைப் பரிமாற்றம் நிகழ்ந்த நிலையில், அசித ஃபெர்னாண்டோ தனது தலையை ஜெய்ஸ்வாலை நோக்கி நகர்த்தினார்.
அதற்குப் பதிலளிக்கும் விதமாக ஜெய்ஸ்வால் முன்னோக்கிச் சாய்ந்ததால், இருவரின் தலைகளும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.















