எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் நாக்-அவுட் சுற்றுக்கு பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் ஆடவர் அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன.
அதேவேளையில், ஆப்கானிஸ்தான், ஹொங்கொங், ஜப்பான், மலேசியா, நேபாளம் மற்றும் ஓமன் ஆகிய அணிகள் அந்த நான்கு முக்கிய அணிகளுடன் இணைவதற்கான முதல் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளன.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளின் அணிகள் மற்றும் குழுக்கள் குறித்த விவரங்கள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டன.
இதில் ஆண்கள் பிரிவில் பத்து அணிகளும், பெண்கள் பிரிவில் எட்டு அணிகளும் பங்கேற்கின்றன.
மகளிர் பிரிவுப் போட்டிகள் காலிறுதிச் சுற்றுகளுடன் தொடங்கவுள்ளன.
இதில் இந்தியா-ஜப்பான், பங்களாதேஷ், சீனா, இலங்கை-மலேசியா மற்றும் பாகிஸ்தான்-தாய்லாந்து அணிகள் மோதவுள்ளன.
இப்போட்டிகள் செப்டம்பர் 17 முதல் 22 வரை நடைபெறும்.
செப்டம்பர் 24 முதல் ஒக்டோபர் 1 வரை நடைபெறவுள்ள ஆடவர் பிரிவுப் போட்டிகளின் தொடக்கச் சுற்றில், ‘ஏ’ பிரிவில் ஆப்கானிஸ்தான், ஜப்பான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஹாங்கொங், மலேசியா மற்றும் ஓமன் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், நேரடியாகத் தகுதி பெற்ற அணிகளுடன் மோதுவதற்காக நாக்-அவுட் (வெளியேற்ற) சுற்றுக்கு முன்னேறும்.
அனைத்துப் போட்டிகளும் ஜப்பானின் நகோயாவில் டி20 (T20) வடிவில் நடைபெறும்.
2023-ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் ஆடவர் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் இந்தியா தங்கப் பதக்கத்தை வென்றது.
ஆண்கள் பிரிவின் இறுதிப் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 18.2 ஓவர்கள் விளையாடிய நிலையில் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
அப்போது அதிக தரவரிசை கொண்ட அணியாக இந்தியா இருந்ததால், அந்த அணிக்குத் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
மகளிர் பிரிவில், இறுதிப் போட்டியில் இந்தியா இலங்கையை 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.














