ரஷ்யா மீதான தடைகள் சட்டமூலத்தை அமெரிக்க செனட் சபை முன்நகர்த்தியுள்ளது.
இது இந்தியா மற்றும் மேலும் நான்கு நாடுகளை 100% சுங்க வரிகளுக்கு உள்ளாக்கும் அபாயத்தில் ஆழ்த்துகிறது.
மறைந்த செனட்டர் லிண்ட்சே கிரஹாம் அவர்களால் முன்மொழியப்பட்ட இந்த விரிவான தடைகள் சட்டம், உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கேபிடல் கட்டிடத்திற்கு வருகை தந்திருந்த செவ்வாய்க்கிழமை (28) அன்று கொண்டுவரப்பட்டது.
உக்ரேன் மீதான படையெடுப்பு விவகாரத்தில் மொஸ்கோ மீதான பொருளாதார அழுத்தத்தை அதிகரிப்பதை இந்த சட்டமூலம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ரஷ்ய மசகு எண்ணெயை வாங்கும் நாடுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது பெரிய நாடாக உள்ளது.
ரஷ்ய எரிசக்தி மீதான தங்களது சார்ந்திருக்கும் தன்மையைக் குறைக்கும் வகையில், ரஷ்ய அதிகாரிகள் மீது தடைகளை விதிக்கவும், இந்தியா, சீனா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அசர்பைஜான் ஆகிய நாடுகள் மீது கடுமையான இறக்குமதி வரிகளை விதிக்கவும் வகைசெய்யும் இந்த சட்டமூலத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான நடைமுறைசார் வாக்கெடுப்பில், 86 வாக்குகள் ஆதரவாகவும் 12 வாக்குகள் எதிராகவும் பதிவாகின.
ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை சீர்குலைத்துள்ள மேற்கு ஆசியப் போரின் காரணமாக, ரஷ்ய எரிசக்தியை இந்தியா சார்ந்திருப்பது அதிகரித்துள்ள ஒரு காலகட்டத்தில் இந்தத் தடைகள் சட்டமூலம் வந்துள்ளது.
ஈரான்-அமெரிக்கப் போர், முன்னர் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் சுமார் 40% ஆக இருந்த வளைகுடா மசகு எண்ணெய் விநியோகத்தை முடக்கியுள்ளது.
இதனால், சுத்திகரிப்பு ஆலைகள் ரஷ்ய மசகு எண்ணெயை முக்கிய மாற்று ஆதாரமாக நாட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளன.
புட்டினின் போருக்குத் துணை நின்றதற்காக இந்தியா மீது கூடுதல் 25 சதவீத இறக்குமதி வரியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தபோது, ரஷ்யாவுடனான எரிசக்தி வர்த்தகத்திற்காக அமெரிக்கா முதன்முதலில் இந்தியா மீது நடவடிக்கை எடுத்தது.
இதனால், இந்தியா மீதான மொத்த வரி விகிதம் 50 சதவீதமாக உயர்ந்தது; இது சீனா மற்றும் பிரேசிலுக்கு இணையான மிக உயர்ந்த அளவாகும்.
இந்த புதிய வரி விதிப்பு இரு நட்பு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை உருவாக்கியதுடன், வர்த்தகப் பேச்சுவார்த்தைகளும் முடங்கின.
இருப்பினும், பெப்ரவரி மாதத்தில் அமெரிக்கா-ஈரான் இடையே போர் மூண்டதைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டதால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் எரிசக்தி நெருக்கடியைச் சந்திக்க நேரிட்டது.
இந்தக் பெரும் இடையூறுக்கு மத்தியில், ரஷ்ய எண்ணெய்க்கான கட்டுப்பாடுகளில் அமெரிக்கா விலக்கு அளித்தது.
இது இந்தியா தனது கொள்முதலை மீண்டும் தொடங்க வழிவகுத்தது.
அமெரிக்காவின் கூற்றுப்படி, இந்தக் கொள்முதல்கள் ரஷ்யாவிற்கு எந்தவிதமான இலாபத்தையும் ஈட்டித் தராது.
இந்த விலக்கு அளிக்கப்பட்ட சூழலில், ஜூன் 2026-ல் ரஷ்ய மசகு எண்ணெய் இறக்குமதி 34% அதிகரித்து சாதனை அளவை எட்டியமையும் குறிப்பிடத்தக்கது.














