கண்டி, எசல பெரஹெர திருவிழாவை முன்னிட்டு, இலங்கை பொலிஸார் நாளை (18) முதல் சிறப்புப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளனர்.
இந்தச் சிறப்பு ஏற்பாடுகள் பெரஹெர திருவிழாக் காலம் முழுவதும் நடைமுறையில் இருக்கும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யு. வுட்லர் (F.U. Wootler) தெரிவித்தார்.
ஸ்ரீ தலதா மாளிகையின் ‘கும்பல் பெரஹெர நாளை தொடங்கி ஆகஸ்ட் 22 வரை நடைபெறும்.
அதேவேளையில், ‘ரந்தோலி பெரஹெர’ (Randoli Perahera) ஆகஸ்ட் 23 முதல் 27 வரை நடைபெறும்.
போக்குவரத்து ஒழுங்குமுறை, வீதித் தடைகள் அமைத்தல், பாதுகாப்புச் சோதனைகள், வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீதான கண்காணிப்பு, சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களை நிர்வகித்தல் ஆகியவை இந்தச் சிறப்புத் திட்டத்தில் அடங்கும்.
திருவிழாவில் கலந்துகொள்ளும் பொதுமக்களுக்கு அவசர உதவி தேவைப்படின் தொடர்புகொள்வதற்காக, 081 22 33 333 என்ற பிரத்யேக அவசரத் தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மேலதிக உதவிகளுக்கு பொலிஸ் பரிசோதகர் ரசிக சம்பத்தை 071 859 1045 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் குறிப்பிட்டார்.
பெரஹெர நிகழ்வின் போது பாதுகாப்புப் பணிகளுக்காக 6,200 பொலிஸ் அதிகாரிகள், 564 விசேட அதிரடிப்படை படையினர், 1,200 முப்படைகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் 29 சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினர் ஈடுபடுத்தப்படுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக பொலிஸ் மோப்ப நாய் பிரிவினரும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
தலதா பெரஹெர நடைபெறும் காலப்பகுதியில், கண்டி நகருக்குள் நுழையும் 14 இடங்களிலும் வீதித் தடைகளை அமைத்துச் சோதனைகளை மேற்கொள்வதன் மூலம் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படவுள்ளது.













