இருதரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இப்பயணத்தின்போது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பு விவகாரம் முக்கிய இடம்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2025 ஏப்ரல் 5 அன்று பிரதமர் நரேந்திர மோடி கொழும்புக்கு மேற்கொண்ட பயணத்தின்போது கையெழுத்தான இந்தியா-இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முழுமையாகவும் உரிய காலத்திலும் செயல்படுத்துவது குறித்த ஆய்வும் இந்த விவாதங்களில் இடம்பெறும் என்று அது மேலும் தெரிவித்தது.
ஐந்து ஆண்டுகளுக்கான இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த முதலாவது விரிவான புரிந்துணர்வு ஒப்பந்தமாகும்.
இது இந்தியப் பெருங்கடலில் உள்ள பொதுவான பாதுகாப்புச் சவால்களைக் கையாள்வதோடு, இருதரப்பு இராணுவ உறவுகளுக்கான ஒரு கட்டமைக்கப்பட்ட வழிமுறையையும் வழங்குகிறது.
கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேம்படுத்துதல், திறன் மேம்பாடு, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளில் ஒத்துழைப்பு, அத்துடன் இரு நாடுகளின் கடற்படைக் கப்பல்கள் துறைமுகங்களுக்கு வருகை தருவதை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இந்த ஒப்பந்தம் உள்ளடக்கியுள்ளது.
மேலும், பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்வதற்கும் இது வழிவகுக்கிறது.
இந்த ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும்; மூன்று மாதங்களுக்கு முன்னதாக அறிவிப்பு அளிப்பதன் மூலம் இரு தரப்பினரும் இதை முடிவுக்குக் கொண்டுவரலாம்.
பரஸ்பர உடன்பாட்டின் மூலம் இதை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் முடியும்.
2014-க்குப் பின்னர் மோடி இலங்கைக்கு மேற்கொண்ட நான்காவது பயணத்தின்போதும், 2024 செப்டெம்பரில் அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்ற பின்னர் இந்தியப் பிரதமர் ஒருவர் அந்நாட்டிற்கு மேற்கொண்ட முதல் பயணத்தின்போதும் பரிமாறப்பட்ட ஏழு இருதரப்பு ஆவணங்களில், பாதுகாப்புத் துறை சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஒன்றாகும்.
2025 ஏப்ரலில் மேற்கொள்ளப்பட்ட பயணத்தின்போது, சுகாதாரம், வெகுஜன ஊடகம், எரிசக்தி மற்றும் இணைப்பு வசதி போன்ற துறைகள் சார்ந்த ஒப்பந்தங்கள் மற்றும் புரிதல்கள் எட்டப்பட்டன.
மேலும், கடன் மறுசீரமைப்பு தொடர்பான இருதரப்புத் திருத்த ஒப்பந்தங்களையும் இந்தியாவும் இலங்கையும் இறுதி செய்தன.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ள நாடுகளுடன் நெருக்கமான பாதுகாப்புப்பு கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கும், கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இந்தியா முக்கியத்துவம் அளித்து வரும் சூழலில், ராஜ்நாத் சிங்கின் வரவிருக்கும் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
இப்பயணமானது, இரு நாடுகளின் இராணுவங்களுக்கு இடையிலான உறவை ஆழமாக்குவதற்கும், பொதுவான பிராந்தியப் பாதுகாப்பு விவகாரங்களில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.













