பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் ஒலிபெருக்கிகள், ஆம்பிளிஃபயர்கள் மற்றும் ஏனைய ஒலி உபகரணங்களை சட்டப்பூர்வமாகப் பயன்படுத்துமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.
இந்த ஒலி மாசுபாடானது கைக்குழந்தைகள், பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு பாரிய சுகாதார மற்றும் உளவியல் ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
உயர்நீதிமன்ற வழக்கு இலக்கம் 38/2005 இன் உத்தரவிற்கு அமைய, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒலி உபகரணங்களைப் பயன்படுத்துவது தண்டனைச் சட்டக்கோவையின் 261 ஆவது பிரிவின் கீழ் பொதுத் தொல்லையாகக் கருதப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக இரவு 10.00 மணி முதல் மறுநாள் காலை 06.00 மணி வரையிலான காலப்பகுதியில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுவதில்லை.
எனினும், மத அல்லது விசேட நிகழ்வுகளின் போது உரிய விடயங்களைக் கருத்திற்கொண்டு சட்டப்பூர்வமாக அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பொலிஸ் அனுமதி பெறப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட நேரங்கள்:
திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை: இரவு 10.00 மணி வரை
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்: அதிகாலை 01.00 மணி வரை
ஞாயிற்றுக்கிழமைகளில்: அதிகாலை 12.30 மணி வரை
எவ்வாறாயினும், இந்த நேர வரையறைகள் அனுமதிப் பத்திரம் பெற்றவர்களுக்கு தானாகவே கிடைக்கும் உரிமையல்ல.
அத்துடன், அனுமதி பெறப்பட்டிருந்தாலும், ஒலியானது சம்பந்தப்பட்ட வளாகத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்படும் வகையில் பேணப்படுவது கட்டாயமாகும்.
அனுமதி வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் நிபந்தனைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
பொதுமக்கள் முறைப்பாடு செய்து, ஒலியால் இடையூறு ஏற்படுவது உறுதிப்படுத்தப்பட்டால், அந்தச் செயற்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு அறிவிக்கப்படும்.
பொலிஸாரின் அறிவிப்பை மீறித் தொடர்ந்தும் அதிக ஒலியுடன் செயற்பட்டால், சம்பந்தப்பட்ட ஒலி உபகரணங்களை பொலிஸார் பொறுப்பேற்பது உட்பட கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
எனவே, சட்டவிரோதமான முறையிலோ அல்லது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலோ அதிக ஒலி எழுப்பப்படுவது தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 118, 119 ஆகிய அவசர தொலைபேசி இலக்கங்களுக்கோ அறிவிக்குமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களை மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர்.














