ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (31) பூட்டானுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, பாரோவில் நடைபெறவுள்ள முதலாவது “Global Conscious Food Systems” (உலக விழிப்புணர்வு உணவு முறைமைகள்) உச்சிமாநாட்டில் அவர் கலந்து கொள்ளவுள்ளதுடன், பல இருதரப்பு உத்தியோகபூர்வ சந்திப்புகளையும் மேறகொள்ளவுள்ளார்.
இலங்கையின் அரசுத் தலைவர் அல்லது அரசாங்கத் தலைவர் ஒருவர் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் பூட்டானுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் சுமூகமான உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைவதோடு, பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.
இந்தப் பயணத்தின்போது பிரதமர் ஹரிணி அமரசூரிய, பூட்டானின் மாண்புமிகு பிரதமர் டாஷோ ஷெரிங் டோப்கே மற்றும் பிற மூத்த அரசு அதிகாரிகளைச் சந்திப்பார்.
இச்சந்திப்புகளில் இருதரப்பு உறவுகள் குறித்த கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுவதுடன், கல்வி, சுகாதாரம், கலாச்சாரம், மக்களிடையேயான உறவுகள் மற்றும் நிலையான வளர்ச்சி உள்ளிட்ட பரஸ்பர நலன் மற்றும் ஒத்துழைப்பு சார்ந்த துறைகள் குறித்தும் விவாதிக்கப்படும்.
செப்டம்பர் 1 அன்று துங்கர் சோங்கில் நடைபெறும் உலக விழிப்புணர்வு உணவு முறைமைகள் தொடர்பான உச்சிமாநாட்டின் தொடக்கக் கூட்டத்தில் உயர்மட்டப் பேச்சாளராகவும் அவர் பங்கேற்பார்.
உலக விழிப்புணர்வு உணவு முறைமைகள் தொடர்பான உச்சிமாநாடு என்பது, நிலையான, சமத்துவமான மற்றும் மீளுருவாக்கம் செய்யக்கூடிய உணவு அமைப்புகளை மேம்படுத்துவதில் விழிப்புணர்வு, விழுமியங்கள், கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் அக மாற்றம் ஆகியவற்றின் பங்கை ஆராய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் உலகளாவிய உச்சிமாநாடு ஆகும்.
இந்த உச்சிமாநாட்டை பூட்டான் அரச அரசாங்கம் மற்றும் விழிப்புணர்வு உணவு அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.














