13 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 20 வயது இளைஞர் ஒருவரை மாதம்பே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பிங்கிரிய, ஹிருவெல்பொல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை தற்போது விளக்கமறியலில் சிறையில் உள்ள நிலையில், வெளிநாட்டில் பணியாற்றி வந்த அவரது தாய் கடந்த மாதம் முதலாம் திகதி இலங்கைக்கு திரும்பியுள்ளார்.
தாய் வெளிநாட்டில் இருந்த காலப்பகுதியில், சிறுமி தனது பாட்டி, சித்தி மற்றும் சகோதர, சகோதரிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இளைஞரும் அதே வீட்டில் அவர்களுடன் தங்கியிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வீட்டில் வேறு யாரும் இல்லாத சந்தர்ப்பங்களில், சந்தேகநபர் தன்னை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தாய் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையின் நீதிமன்ற வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சிலாபம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.












