கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் அனைத்துலகை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.அந்த நிகழ்வு ஒரு சர்வதேச மாநாடாக ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.ஐநாவின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு பணிக் குழுவின் உறுப்பினராகிய அனா ,சர்வதேச மன்னிப்புச் சபையின் தென்னாசியப் பிரிவுக்குப் பொறுப்பான பெண் உட்பட கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களின் தமிழ் பிரதிநிதிகளும் அங்கே வந்திருந்தார்கள்.காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் சிவில் செயற்பாட்டாளர்களும் வெளி மாவட்டங்களில் இருந்தும் கொண்டுவரப்பட்டிருந்தார்கள்.மண்டபம் நிறைந்த சனம்.
அந்த நிகழ்வின் ஒரு பகுதியாக,முதலில் வீரசிங்க மண்டபத்துக்கு முன்னிருந்து ஒரு வாகன ஊர்த்தி புறப்பட்டு யாழ்ப்பாணம் நகரப் பகுதியூடாக நகர்ந்து வந்து முடிவில் தந்தை செல்வா கலையரங்கை வந்தடைந்தது. இந்த வாகன ஊர்தியில் ஒரு பாரம் தூக்கி வாகனத்தில் ஒரு வெள்ளை வான் வைக்கப்பட்டிருந்தது.அந்த வானின் வெள்ளை உடல் முழுவதும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் முகங்கள் பதிக்கப்பட்டு இருந்தன.
அந்த நிகழ்வை செய்தியாக்குவதற்கு கொழும்பிலிருந்து வந்திருந்த ஒரு தமிழ்ச் செய்தியாளர்-இவர் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக கொழும்புக்கும் மாலை தீவுக்குமான அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு செய்தியாளராக இருக்கிறார்- அந்த நிகழ்வு பற்றி பின்வருமாறு கேட்டார் “அந்த ஊர்வலம் தீப்பந்தங்களோடு யாழ் நகரப் பகுதியூடாக நடந்து வந்தபோது, அது நகரத்தின் வழமையான இயக்கத்தை எந்த வகையிலும் பாதித்திருக்கவில்லை. நகரம் தன்பாட்டில் இயங்கிக் கொண்டிருந்தது. ஊர்வலம் அதன் பாட்டில் போய்க்கொண்டிருந்தது. நகரத்திலிருந்து நடந்து போகக்கூடிய தூரத்தில்தான் தந்தை செல்வா கலையரங்கு உண்டு. அங்கே நூற்றுக்கணக்கானவர்கள் மண்டபத்தில் திரண்டிருந்தார்கள். அந்த நிகழ்விற்கும் நகரத்தின் செயற்பாடுகளுக்கும் இடையில் எந்த தொடர்பும் இருக்கவில்லை. நகரம் தன்பாட்டில் இயங்கிக் கொண்டிருந்தது. அந்த மாநாடு அதன் பாட்டில் நடந்து கொண்டிருந்தது. ஏன் இந்த செயற்பாடுகள் மக்கள் பயப்படவில்லை” என்ற பொருள்பட அவர் கேட்டார்.
இதுதான் கடந்த 17 ஆண்டுகளுக்கு மேலான தமிழ்த் தேசிய அரசியல் யதார்த்தம் ஆகும்.பாதிக்கப்பட்ட மக்களே பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடுகிறார்கள்.தம் பிள்ளைகளை பறிகொடுத்த உறவினர்கள்தான்,தமது பிள்ளைகளுக்கு நீதி கேட்டுத் தெருவில் நிற்கிறார்கள்.அரசியல் கைதிகளுக்காக பெரும்பாலும் அரசியல் கைதிகள்தான் போராடுகிறார்கள்.மட்டக்களப்பில் மேச்சல் தரைகளுக்காக பண்ணையாளர்கள்தான் போராடுகிறார்கள். தையிட்டியில் ஒவ்வொரு முழுநிலா நாளின் போதும் காணிகளின் சொந்தக்காரர்கள்தான் தொடர்ந்து போராடுகிறார்கள்.அவர்களோடு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி உறுப்பினர்களும் காணப்படுவார்கள்.
மேற்படி போராட்டங்களில் சிவில் சமூகங்கள் சிறிய அளவில் இணைவதுண்டு. சில சமயங்களில் கட்சிகளும் சிவில் சமூகங்களும் இணையும்போது போராட்டம் பெரிதாகுவதுண்டு.
கடந்த 17ஆண்டுகால தமிழ்த் தேசியப் போராட்டக் காட்சி அதுதான். பாதிக்கப்பட்ட மக்களே போராடுகிறார்கள்.ஏனைய பெருந் திரள் மக்கள் அதில் சம்பந்தப்படாதது போல விலகி பார்வையாளர்களாக நிற்கிறார்கள். அல்லது உணவு திருவிழாக்களுக்கும்,வாகனப் பெருவிழாக்களுக்கும், கோவில் பெரு விழாக்களுக்கும் போகிறார்கள். புதிய பெரிய கடைகள் திறக்கப்படும்போது அங்கே போய் வரிசையில் நிற்கிறார்கள்.தமிழ் மக்கள் தங்களுடைய சொந்த அரசியலின் மீது,தங்களுடைய தலைமுறைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய அரசியலில் மீது,உணர்திறன் குறைந்தவர்களாகக் காணப்படுகிறார்கள் என்பதனை அது காட்டுகிறது.
ஒருபுறம் இளம் தலைமுறையின் ஒரு பகுதி எப்படிப் புலம் பெயரலாம் என்று சிந்திக்கிறது.அரைக் களிசானும்,குளிரில் ஒப்பீட்டளவில் வெள்ளையாக மாறிய கால்களுமாக, கைகளில் தண்ணீர் போத்தல்களோடு,ஊரில் நடந்து திரியும் புலம் பெயர்ந்த தமிழர்கள்தான் ஒரு பகுதி இளையோருக்கு முன்னுதாரணமாகக் காணப்படுகிறார்கள். நாட்டிலுள்ள படித்தவர்கள்,நல்ல பதவிகளில் உள்ளவர்கள்,தொழில் முனைவோர் போன்றவர்களை அவர்கள் முன்னுதாரணமாகக் கொள்ளவில்லை.
எப்படிப் புலம் பெயரலாம்? எப்படி இலகுவாக விசா எடுக்கலாம்? விசா எடுப்பதற்கு என்ன படிக்க வேண்டும்? எதைப் படித்தால் விசா இலகுவாக கிடைக்கும்? போன்ற ஆலோசனைகளை அதாவது புலம்பெயர்வதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கு என்று முக்கிய தமிழ் நகரங்களில் கடைகள் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான தமிழ் கிராமங்களில் ஆளில்லா வீடுகள் அதிகரித்து வருகின்றன. ஆளில்லா வீடுகள் இரண்டு வகைப்படும். ஒன்று ஆட்கள் எங்கே என்று தெரியாத போரில் இறந்துபோன புலம்பெயர்ந்து விட்ட தமிழர்களின் வீடுகள்.அவை அநேகமாக பாழடைந்த வீடுகள்.இன்னொரு புறம்,தமது சொந்த ஊரில் தமது செல்வச் செழிப்பைக் காட்டுவதற்காக புலம்பெயர்ந்த தமிழர்கள் கட்டும் பிரம்மாண்டமான மாட மாளிகைகள்.இந்த மாட மாளிகைகளை ஒன்றில் “செக்யூரிட்டி” நிறுவனங்கள் பாதுகாக்கின்றன.அல்லது “சிசிடிவி” கமராக்கள் கண்காணிக்கின்றன.இவ்வாறாக தாயகம் என்று தமிழ் மக்கள் அழைத்துக் கொள்ளும் பகுதிகளில், குறிப்பாக கிராமப்புறங்களில்,ஒரு பகுதி வீடுகளில் ஆட்கள் இல்லை.அதாவது தாயகத்தில் சனத்தொகை குறைகிறது என்று பொருள்.
இருக்கின்ற ஜனத்தொகையையும் தாயகத்தில் காலூன்றி,வேர் கொண்டு, பூத்துக்காய்க்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தும் ஜனவசியம் மிக்க தலைவர்கள்,செயற்பாட்டாளர்கள்,பேச்சாளர்கள்,எழுத்தாளர்கள்,சமூகத் தலைவர்கள் எத்தனை பேர் உண்டு?
அண்மையில் ஒரு மத நிறுவனத்தின் வளாகத்தில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் நடாத்தப்பட்ட கருத்தரங்கு பற்றி இங்கு கூறவேண்டும். இந்தச் சந்திப்பில் 60க்கும் குறையாதவர்கள் வந்திருந்தார்கள்.மூன்று மதங்களையும் சேர்ந்த படித்தவர்கள்,அரச ஊழியர்கள்,கிராம மட்டச் செயற்பாட்டாளர்கள்,மதகுருக்கள்,ஆண்கள்,பெண்கள் என்று 60க்கும் குறையாதவர்கள் வந்திருந்தார்கள்.அங்கு உரைநிகழ்த்திய வளவாளர் கடைசியாக சில கேள்விகளைக் கேட்டார்.
அதில் முதலாவது கேள்வி, “உங்களுடைய மிகப்பெரிய பயம் எது?” அங்கிருந்த பெரும்பாலானவர்களின் பதில் என்ன தெரியுமா? எமது அடுத்த தலைமுறை எங்களுடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இல்லை.அந்தத் தலைமுறையை எப்படி நெறிப்படுத்தப் போகிறோம் என்பதுதான் எங்களுக்குள்ள பெரிய பயமும் கவலையும் என்று சொன்னார்கள்.
அடுத்த கேள்வி “உங்களுடைய மிகப்பெரிய நம்பிக்கை எது?” எல்லாருமே ஒரே குரலில் சொன்ன விடயம், ஒன்றில் நாங்கள் எங்களை நம்புகிறோம். அல்லது கடவுளை நம்புகிறோம் என்பதுதான். அதாவது அங்கு வந்திருந்த யாருமே எந்த ஒரு கட்சித் தலைவரையோ அல்லது மதத் தலைவரையோ சமூகத் தலைவரையோ தங்களுடைய ஆதர்ச தலைவராக கூறவில்லை. தமிழ் அரசியல் பரப்பில் குறிப்பாக தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் அந்த மக்களை கவரத்தக்க ஜனவசியம்மிக்க தலைவர்கள் இல்லை என்று பொருள்.
இது ஓர் ஆபத்தான வளர்ச்சி.தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பகுதியினர் தற்போதுள்ள தலைவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை.இன்னொரு பகுதியினர் யாருக்கு வாக்களித்தார்களோ,அவர்களை ஒன்றில் திட்டுகிறார்கள் அல்லது சந்தேகிக்கின்றார்கள்.இப்படிப்பட்டதோர் அரசியல் பின்னணியில்,நமது கட்சிகள் மாகாண சபைத் தேர்தலை வைக்க வேண்டும் என்று அரசாங்கத்தைக் கேட்கின்றன.இந்தியாவைக் கேட்கின்றன.தனித்தனியாகக் கேட்கின்றன. கூட்டாகச் சேர்ந்து நின்று கேட்கின்றன.
ஆனால் தமிழ் மக்கள் தங்களுடைய சொந்த அரசியலின் மீது உணர்திறன் குறைந்தவர்களாக மாறி வருவதை குறித்து அல்லது அதைவிட கூர்மையான வார்த்தைகளில் சொன்னால், தமிழ் மக்கள் படிப்படியாக அரசியல் நீக்கம் செய்யப்படுவது குறித்து இந்தக் கட்சிகள் என்ன கருதுகின்றன? தமிழ் மக்களை அரசியல் நீக்கம் செய்வது எதிரியல்ல. தமது சொந்த மக்களை தமது சொந்த அரசியலின் மீது உணர்திறன் மிக்கவர்களாக மாற்றத் தவறிய மேற்படி கட்சிகள்தான் என்பதனை அந்த கட்சிகள் உணர்ந்திருக்கின்றனவா? சிவப்பு மஞ்சள் கொடிகளை அசைத்தால் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்று இந்த கட்சிகள் இப்பொழுதும் நம்புகின்றனவா?
இப்பொழுது இக்கட்டுரையைத் தொடங்கிய இடத்துக்கே வருவோம். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த மாநாட்டை ஒழுங்குபடுத்தியது பாதிக்கப்பட்ட மக்களின் அமைப்புகள்தான். கட்சிகள் அல்ல. சிவில் சமூகங்களும் அல்ல. பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழ் அமைப்புகளும் தனி நபர்களும் உதவுகிறார்கள்.அந்த உதவிதான் கடந்த 17 ஆண்டுகளாக அம்மாக்களின் போராட்டத்தை அணைய விடாது பாதுகாத்து வருகிறது. அதேசமயம் அம்மாக்களுக்கு இடையில் ஏற்படும் முரண்பாடுகளுக்கும் அந்த உதவிதான் காரணம் என்ற ஓர் அவதானம் உண்டு.
எதுவானாலும் அந்தப் போராட்டத்தை கட்சிகள் ஒழுங்குபடுத்தவில்லை.போராடும் அம்மாக்கள் அழைத்தால் கட்சிகள் போய் அங்கே அமர்ந்திருக்கின்றன.எனினும் அழைக்கப்பட்ட விதம் தொடர்பில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் பதில் செயலாளரும் அங்கு வந்திருக்கவில்லை.நீதிக்கான போராட்டத்தின் உணர்ச்சிகரமான ஒரு பகுதியாகிய அம்மாக்களின் மாநாட்டுக்கு இருப்பதில் பெரிய கட்சியின் ஒரு பகுதி வரவில்லை.சிறீதரனும் இரண்டு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கே காணப்பட்டார்கள்.இருப்பதில் பெரிய கட்சி இப்படித்தான் அனைத்துலக மாநாடு ஒன்றை எதிர்கொள்ளுமாக இருந்தால் தமிழ் அரசியல் எங்கே நிற்கிறது? இந்த லட்சணத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் தாங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவோம் என்று அவர்கள் நம்புகிறார்களா?













