மியாமி சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்று (06) அன்று தரையிறங்கும்போது, அமேசான் பிரைம் ஏர் (Amazon Prime Air) சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையைத் தாண்டிச் சென்று தரையிலிருந்த வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்த விபத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர்; இவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மியாமி-டேட் தீயணைப்புத் துறைத் தலைவர் ரே ஜடல்லா தெரிவித்தார்.
விமானம் மோதிய வாகனங்களில் குறைந்தது இருவர் சிக்கிக்கொண்டதாகவும், விபத்தின் காரணமாக விமானி மற்றும் துணை விமானி ஆகியோர் விமானத்திற்குள்ளேயே சிக்கிக்கொண்டதாகவும் ஜடல்லா கூறினார்.
உயிரிழந்தவர்களின் விவரங்களை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து 60-க்கும் மேற்பட்ட மீட்புக் குழுக்களும் சுமார் 200 பணியாளர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டதாக மியாமி-டேட் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (Miami-Dade Fire Rescue) அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
பிற்பகல் வரை, விமானத்திலிருந்து தொடர்ந்து எரிபொருள் கசிந்து கொண்டிருந்ததால், அவசரக்காலப் பணியாளர்கள் அதைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்ததாக ஜடல்லா கூறினார்.
விபத்து நடந்த உடனேயே விமான நிலையம் அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தி வைத்திருந்தாலும், ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் அதன் நான்கு ஓடுபாதைகளில் இரண்டு மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டன.
விமானப் போக்குவரத்து கண்காணிப்பு சேவையான ‘Flightradar24’-இன் தகவலின்படி, புவேர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவானிலிருந்து புறப்பட்ட அந்த விமானம், 32 ஆண்டுகள் பழமையான போயிங் (Boeing) 767-300 ரக சரக்கு விமானமாகும்,
இது 1994 முதல் 2015 வரை பல்வேறு விமான நிறுவனங்களால் பயணிகள் விமானமாக இயக்கப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.













