2026 மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில் ஹொங்கொங் அணிக்கு எதிரான தங்கள் இறுதி குழு நிலைப் போட்டியில், பாகிஸ்தான் 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
டுபாயில் நேற்று (07) நடைபெற்ற இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் நஷ்ரா சந்து வரலாற்றுச் சாதனை படைத்தார்.
சர்வதேச டி20 போட்டிகளில் பாகிஸ்தான் வீராங்கனை ஒருவர் பதிவு செய்த மிகச்சிறந்த பந்துவீச்சு புள்ளிவிவரத்தை அவர் இதில் பதிவு செய்தார்.
72 ஓட்டங்கள் வித்தியாசத்திலான அந்த வெற்றி, இப்போட்டியின் அரையிறுதியில் பாகிஸ்தான் தனது இடத்தை உறுதிசெய்ய உதவியது.
அணியின் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் நஷ்ரா சந்து; நான்கு ஓவர்களில் 7 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக் கொடுத்து ஆறு விக்கெட்டுகளை எடுத்து அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அவரது பந்துவீச்சு ஹங்கொங் அணியின் துடுப்பாட்ட வரிசையைச் சரித்தது.
144 ஓட்டங்கள் என்ற இலக்கைக் காக்கும் முயற்சியில், ஆட்டத்தில் தொடர்ந்து நீடிக்க பாகிஸ்தானுக்கு ஆரம்பக்கட்ட விக்கெட்டுகள் தேவைப்பட்டன.
அந்த வகையில் நஷ்ரா சந்துவின் பந்துவீச்சு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
அவரது துல்லியமான மற்றும் மாறுபட்ட பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய ஹங்கொங் அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததுடன், 19 ஆவது ஓவரில் 71 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது.
இந்த ஆறு விக்கெட் சாதனை சந்துவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இடத்தைப் பெற்றுத் தந்தது.
மகளிர் டி20 சர்வதேசப் போட்டியில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் இவராவார்.

2022-ல் இலங்கைக்கு எதிராக ஒமைமா சோஹைல் 13 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள் வீழ்த்திப் படைத்திருந்த சாதனையை முறியடித்து.
இப்போட்டி வடிவில் பாகிஸ்தான் வீராங்கனை ஒருவரின் மிகச்சிறந்த பந்துவீச்சுப் பதிவாகவும் இது அமைந்தது.
சந்துவின் சிறப்பான ஆட்டத்திற்காக அவர் ‘ஆட்ட நாயகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இத்தொடரின் முந்தைய கட்டத்தில் இந்தியாவிடம் அடைந்த பெரும் தோல்விக்குப் பின்னர் ஒரு வலுவான பதிலடியை அளிக்க வேண்டிய நிலையில் இருந்த பாகிஸ்தானுக்கு, அவரது இந்தச் செயல்பாடு மிக முக்கியமான தருணத்தில் அமைந்தது.
72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்ற இந்த வெற்றி, ‘குழு ஏ’ பிரிவில் பாகிஸ்தான் பெற்ற இரண்டாவது வெற்றியாகும்.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக நான்கு புள்ளிகளுடன் அப்பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்த பாகிஸ்தான், அரையிறுதிச் சுற்றிலும் தனது இடத்தை உறுதி செய்தது.
இனி, செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமையன்று நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், பிராந்திய அளவிலான போட்டியாளரான இலங்கையை பாகிஸ்தான் எதிர்கொள்ளவுள்ளது.
பாகிஸ்தான் வெற்றி பெறுவதற்கு முன்பாகவே இலங்கை தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்திருந்தது.
ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்ற மூன்றாவது அணியாகும்.
செப்டம்பர் 10 வியாழக்கிழமையன்று நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் தங்களை எதிர்த்து விளையாடப்போகும் அணியை அறிய, பங்களாதேஷ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) அணிகளுக்கு இடையிலான போட்டியின் வெற்றியாளருக்காக இந்திய அணி காத்திருக்கும்.













