மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக பொது மக்கள் முன்னெடுத்து வரும் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதன் காரணமாக ஐ.நா. சபை மற்றும் உலக நாடுகள் பலவும் இராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் மியன்மாரில் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படுமென அந்நாட்டின் இராணுவ ஆட்சித்தலைவர் மின் ஆங் ஹ்லைங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில் ” தேர்தலில் மோசடி நடைபெற்றதால் தான் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. எனவே நேர்மையான முறையில் தேர்தல் நடத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவரிடம் அதிகாரங்கள் ஒப்படைக்கப்படும். இதனால் அடுத்த 6 மாதங்களுக்குள் நாடாளுமன்ற தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 4 ஆண்டுகளாக உள்ள ராணுவ அவசர நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மியன்மாரின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு, அதிகாரிகளுக்கு அதுதொடர்பான பயிற்சி போன்றவை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த தேர்தல் தொடர்பான வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கும் புதிய சட்டம் ஒன்றையும் அரசாங்கம் இயற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.














