அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் தலைமையில், அம்பாறை மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நிந்தவூர் மர்ஹூம் அஸ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வு, அல்ஹிக்மா ஃபவுண்டேஷன் அமைப்பின் அனுசரணையிலும், மாஸ் ஃபவுண்டேஷன் அமைப்பின் ஒருங்கிணைப்பிலும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் உரையாற்றிய அஷ்ரப் தாஹிர் , கல்வியே சமூக முன்னேற்றத்தின் அடித்தளம் எனக் குறிப்பிட்டதுடன், மாணவர்களின் எதிர்கால வெற்றிக்கு இத்தகைய கல்வி ஆதரவு முயற்சிகள் மிக அவசியமானவை எனத் தெரிவித்தார்.
இத்திட்டத்திற்கு அனுசரணை வழங்கிய அல்ஹிக்மா ஃபவுண்டேஷன் அமைப்பு, மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டு 2000ஆம் ஆண்டு நிறுவப்பட்டதாகவும், இன்று அகில இலங்கை அளவில் சமூக சேவைகளை முன்னெடுத்து வருவதாகவும், இங்கு உரையாற்றிய அவ்வமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
டாக்டர் அப்பாஸ் இபாதுல்லா அவர்களால் நிறுவப்பட்ட இவ்வமைப்பு, தர்மம், கல்வி மற்றும் சமூக நலன்களை ஒருங்கிணைத்து, மக்களின் வாழ்வாதார நிலையை உயர்த்துவதை தனது பிரதான நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அதேபோன்று, கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் “Education for All” திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி ஆதரவு வழங்கும் நடவடிக்கைகளில் நிந்தவூர் மாஸ் ஃபவுண்டேஷன் அமைப்பு இணைந்து கொண்டதையிட்டு மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் அல்ஹிக்மா ஃபவுண்டேஷன் அமைப்பின் பிரதிநிதிகள், நிந்தவூர் மாஸ் ஃபவுண்டேஷன் அமைப்பின் தலைவர் உட்பட உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், கட்சியின் சார்பிலான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.













