ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகள் கூட்டு ஆயுதக் கொள்முதலை மேற்பார்வையிடவும், மறுசீரமைப்பு செலவுகளைக் குறைக்கவும் கூடிய ஒரு பன்னாட்டு பாதுகாப்பு முயற்சியை உருவாக்க வேண்டும் என்ற வாதத்தை இங்கிலாந்துப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வார இறுதியில் நடைபெறும் மியூனிக் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் ஸ்டார்மர் இந்த யோசனையை முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரிட்டிஷ் அரசாங்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி பைனான்சியல் டைம்ஸ் செய்திச் சேவை இன்று கூறியுள்ளது.
உச்சி மாநாட்டில் சனிக்கிழமையன்று ஒரு உரையிலும், மூன்று நாள் நிகழ்வில் ஏனைய தலைவர்களுடன் தனிப்பட்ட கலந்துரையாடல்களிலும் அவர் நட்பு நாடுகளுடன் நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுக்க உள்ளார் என்று செய்திச் சேவை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பின் எதிர்காலத்திற்கான தனது தொலைநோக்குப் பார்வையை கோடிட்டுக் காட்டும் உரையை பிரதமர் ஸ்டார்மர் மியூனிக் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் சனிக்கிழமை நிகழ்த்துவார் என்று டவுனிங் ஸ்ட்ரீட் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
உலகின் சிறந்த பாதுகாப்பு மன்றங்களில் ஒன்றான மியூனிக் பாதுகாப்பு உச்சி மாநாடு பெப்ரவரி 13-15 வரை நடைபெறவுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், பாதுகாப்புத் திட்டங்களுக்கான இரண்டாவது பல பில்லியன் யூரோ மதிப்புள்ள ஐரோப்பிய ஒன்றிய நிதியில் சேர விண்ணப்பிப்பது குறித்து தனது அரசாங்கம் இந்த மாநாட்டில் பரிசீலிக்கும் என்று ஸ்டார்மர் கூறியுள்ளார்.













