அமெரிக்க அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, ரிச்டர் அளவுகோலில் 7.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதிகாலை 12.57 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையம், சபா மாநிலத்தின் கரையோரத் தலைநகரான கோட்டா கினாபாலு நகரத்திலிருந்து வடகிழக்கே சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில், குறைந்த ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் அல்லது பெரும் சேதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மதிப்பிட்டுள்ளது. இதனால், எந்தவிதமான அவசர எச்சரிக்கையும் வெளியிடப்படவில்லை.
இதனிடையே, அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிட்ட அறிவிப்பில், நிலநடுக்கத்தின் ஆழம் காரணமாக சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
மலேசிய வானிலை ஆய்வுத் திணைக்களம் வெளியிட்ட தகவலின்படி, நிலநடுக்கம் 6.8 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
சபா மாநிலத்தின் மேற்கு கரையோரப் பகுதிகளிலும், சரவாக் மாநிலத்தின் பல பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சிங்கப்பூர் நாட்டிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.
தற்போதுவரை எந்தவிதமான சேத விவரங்களோ அல்லது உயிரிழப்புகள் குறித்த உறுதியான தகவல்களோ வெளியாகவில்லை. அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.















