பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், பொது இடங்களில் போதைப்பொருள் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக 2025-இல் கொண்டுவரப்பட்ட சட்டத்தில் புதிய திருத்தங்களை ஒன்ராறியோ அரசு முன்மொழிந்துள்ளது.
இதன்படி, TTC போன்ற பொதுப் போக்குவரத்து இடங்களில் சட்டவிரோத போதைப்பொருட்களைப் பயன்படுத்துபவர்களை எச்சரிக்கவும், அதையும் மீறி பயன்படுத்துபவர்களைக் கைது செய்யவும், அவர்களிடமுள்ள போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்யவும் விசேட கான்ஸ்டபிள்களுக்கு அதிகாரம் வழங்கப்படும்.
தற்போது விசேட கான்ஸ்டபிள்களிடம் மிளகுத் தூள் தெளிப்பான் (Pepper Spray) மற்றும் தடியடி நடத்தும் லத்தி (Baton) மட்டுமே உள்ளன.
புதிய அதிகாரங்கள் வழங்கப்பட்டால், போதைப்பொருள் பயன்படுத்துபவர்களால் ஏற்படக்கூடிய எதிர்பாராத வன்முறைகளைக் கையாளத் தங்களுக்கு ‘டேசர்’ (Taser) போன்ற மின்சார அதிர்வு ஆயுதங்கள் தேவை என ஒன்ராறியோ விசேட கான்ஸ்டபிள்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
“லத்தி என்பது ஒருவரைத் தாக்கும் கருவி, ஆனால் டேசர் என்பது தூரத்தில் இருந்தே நிலைமையைக் கட்டுப்படுத்த உதவும் பாதுகாப்பு கருவி” என அச்சங்கத்தின் தலைவர் சாரா கென்னடி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்தத் திட்டம் வீடற்றவர்களைக் குற்றவாளிகளாகச் சித்திரப்படுபவதாகவும், சமூகத்தில் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள விளிம்புநிலை மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
போதைப்பொருள் பயன்பாடு என்பது ஒரு சுகாதாரப் பிரச்சினை என்றும், அதை பொலிஸ் அதிகாரத்தைக் கொண்டு கையாள்வது தீர்வாகாது என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
இந்த முன்மொழிவு குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை மார்ச் 1-ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம்.
மாகாண அரசு இந்த அதிகாரங்களை வழங்கினாலும், டொராண்டோ பொலிஸ் சேவைகள் சபை (TPSB) அனுமதி வழங்கினால் மட்டுமே TTC விசேட கான்ஸ்டபிள்களால் இந்த அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.















