ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை அழைத்துச் செல்ல போர்க்கப்பல்களை அனுப்புமாறு டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அழைப்பை பல அமெரிக்க நட்பு நாடுகள் திங்களன்று (16) நிராகரித்தன.
பல தசாப்த கால ஆதரவிற்குப் பின்னர் மேற்கத்திய பங்காளிகள் இந்த விடயத்தில் நன்றியுணர்வு இல்லாதவர்கள் நடந்து கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி குற்றம்சாட்டினார்.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் மூன்றாவது வாரத்தில் முடிவின்றி தொடர்கிறது.
உலகின் எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் 20 சதவீதம் வெளியேறும் முக்கியமான ஹார்முஸ் நீரிணை பெரும்பாலும் மூடப்பட்டுள்ளது.
இதனால், உலகளாவிய ரீதியில் எரிசக்தி விலைகள் உயர்ந்து பணவீக்கம் குறித்த அச்சம் நிலவுகிறது.
இந்த மோதல் ஏற்கனவே அமெரிக்க நட்பு நாடுகளின் மீது பொருளாதாரச் செலவுகளைச் சுமத்தியுள்ளது.
ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களுக்கு முன்னர் அவர்களிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை.
மேலும், ட்ரம்ப் மீண்டும் பதவிக்கு வந்ததிலிருந்து பல மாதங்களாக கடுமையான விமர்சனங்களையும், போர்க்குணமிக்க அச்சுறுத்தல்களையும் அவர்கள் தாங்கி வருகின்றனர்.
ஈரான் ட்ரோன்கள் மற்றும் கடற்படை கண்ணிவெடிகள் மூலம் திறம்பட மூடியுள்ள இந்த மூலோபாய நீர்வழியை மீண்டும் திறக்க உதவுவதற்காக கப்பல்களை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என்று ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் இத்தாலி உள்ளிட்ட பல அமெரிக்க பங்காளிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் திங்களன்று வொஷிங்டனில் நடந்த வெள்ளை மாளிகை நிகழ்வில் பேசிய ட்ரம்ப், ஹார்முஸ் நீரிணை விடயத்தில் பல நாடுகள் உதவத் தயாராக இருப்பதாகத் தன்னிடம் கூறியதாகவும், ஆனால் சில நீண்டகால நட்பு நாடுகள் மீது விரக்தியை வெளிப்படுத்தியதாகவும் கூறினார்.
மூன்று வார போருக்கான இஸ்ரேலின் திட்டம்
ஈரானிய ட்ரோன் தாக்குதல்கள் துபாய் விமான நிலையத்தை தற்காலிகமாக மூடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஒரு முக்கிய எண்ணெய் நிலையத்தைத் தாக்கிய அதே வேளையில், ஈரான் முழுவதும் ஒரே இரவில் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனால், குறைந்தது மூன்று வார காலப் போருக்கான விரிவான திட்டங்களை திங்களன்று இஸ்ரேல் வகுத்துள்ளது.
ஈரானின் உச்ச தலைவரின் கொலைக்கு பழிவாங்கும் விதமாக ஹெஸ்பொல்லா இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசியதைத் தொடர்ந்து, விரிவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இஸ்ரேல் படைகள் தெற்கு லெபனானின் புதிய பகுதிகளுக்குள் நுழைந்தன.
ஒரு கூட்டு அறிக்கையில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள், எந்தவொரு குறிப்பிடத்தக்க இஸ்ரேலிய தரைவழி தாக்குதலும் பேரழிவு தரும் மனிதாபிமான விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் நீடித்த மோதலுக்கு வழிவகுக்கும் என்றும், அத்தகைய நடவடிக்கை தவிர்க்கப்பட வேண்டும் என்றும் எச்சரித்தன.
இஸ்ரேல், ஈரானை அச்சுறுத்தும் அதன் திறனை பலவீனப்படுத்த விரும்புவதாகவும், பாலிஸ்டிக் ஏவுகணை உள்கட்டமைப்பு, அணுசக்தி நிலையங்கள் மற்றும் பாதுகாப்பு எந்திரத்தைத் தாக்க விரும்புவதாகவும், இன்னும் ஆயிரக்கணக்கான இலக்குகளைத் தாக்க வேண்டியுள்ளதாகவும் கூறியுள்ளது.
அதேநேரம், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தொழிற்சாலைகளைத் தாக்குவோம் என்று ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) கூறியதுடன், அமெரிக்க ஆலைகளுக்கு அருகில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறும் வலியுறுத்தியது.
மேலும், தெஹ்ரான் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்காவிட்டால், நாட்டின் முக்கிய எண்ணெய் மையமான கார்க் தீவில் உள்ள எண்ணெய் ஆலைகளைத் தாக்கக்கூடும் என்ற ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கும் ஈரான் பதிலளித்தது.
ஈரானின் விண்வெளித் திட்டம் மீதான தாக்குதல்களுக்கு பெறுப்பேற்ற இஸ்ரேல்
ஈரானின் விண்வெளித் திட்டத்துடன் தொடர்புடைய தளங்கள் மீது தனது விமானப்படை தாக்குதல் நடத்தியதாகவும், 2024-ல் ஏவப்படவுள்ள ஒரு செயற்கைக்கோளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தெஹ்ரானில் உள்ள ஒரு ஆராய்ச்சி மையத்தை அழித்ததாகவும் இஸ்ரேல் கூறியது.
இதனால், இரவு முழுவதும் இணையம் இல்லை என்றும், ஈரானியர்கள் உலகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்வதாகவும் தெஹ்ரானைச் சேர்ந்த ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
இடைவிடாத ஈரானின் ஏவுகணை மழை
டெல் அவிவில், ஈரானிய ஏவுகணைகள் வருவதை எச்சரிக்கும் வான்வழித் தாக்குதல் சைரன்கள் நள்ளிரவு வரை ஒலித்தன.
இரண்டு வாரங்களுக்கும் மேலான போருக்குப் பிறகும், தொலைதூரத் தாக்குதல்களை நடத்தும் திறனை தெஹ்ரான் இன்னும் தக்கவைத்துள்ளது என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டியது.
டெல் அவிவ் பகுதிகள், அபுதாபியில் உள்ள அமெரிக்காவின் அல் தஃப்ரா விமானத் தளம், பஹ்ரைனில் உள்ள அமெரிக்கக் கடற்படைத் தளம் மற்றும் பஹ்ரைனின் ஷேக் ஈசா விமானத் தளம் ஆகியவற்றின் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை முன்னதாகக் கூறியிருந்தது.
ஓமான் வளைகுடாவை ஒட்டிய ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரையில், ஈரானிய ஆளில்லா விமானத் தாக்குதலுக்குப் பிறகு ஃபுஜைரா துறைமுகத்தில் எண்ணெய் ஏற்றும் பணிகள் பகுதியளவு மீண்டும் தொடங்கின.
உலகளாவிய தேவையில் சுமார் 1 சதவீதத்திற்குச் சமமான அளவிலான ஐக்கிய அரபு அமீரகத்தின் முர்பான் மசகு எண்ணெய்க்கான ஒரு முக்கிய வெளியேறும் இடமாக ஃபுஜைரா விளங்குகிறது.
துபாய் விமான நிலையத்திற்கு அருகில் ட்ரோன் தாக்குதல்
உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையத்தில், அருகிலுள்ள எரிபொருள் சேமிப்புக் கிடங்கு மீது ஆளில்லா விமானம் தாக்கியதில் வானில் கரிய புகை பரவியதைத் தொடர்ந்து, பல மணி நேரம் விமானச் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.
சவுதி அரேபியா தனது கிழக்குப் பகுதியில் ஒரு மணி நேரத்தில் 34 ஆளில்லா விமானங்களை இடைமறித்ததாக அரசு ஊடகங்கள் தெரிவித்தன.
இந்த இரண்டு சம்பவங்களிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்தக் கொந்தளிப்புக்கு மத்தியிலும், ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டொலருக்கும் அதிகமாக இருந்த எண்ணெய் விலைகள் சரிந்தன.
மேலும், சில ஈரானிய எரிபொருள் கப்பல்களை நீர்வழிப்பாதை வழியாகச் செல்ல அனுமதிப்பதில் அமெரிக்காவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், இந்திய மற்றும் சீன எண்ணெய்க் கப்பல்களும் அவ்வழியாகச் சென்றதாக நம்புவதாகவும் அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறியுள்ளார்.












