ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரங்களான ரஷீத் கான் மற்றும் மொஹமட் நபி ஆகியோர் காபூலில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்கள் ஒரு மருத்துவமனையைத் தாக்கி, பொதுமக்களுக்கு பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாகக் கூறப்படுவதைக் கண்டித்துள்ளனர்.
தாக்குதல் குறித்த செய்திகளைத் தொடர்ந்து இரு கிரிக்கெட் வீரர்களும் சமூக ஊடகங்களில் பதிவுகள் மூலம் தங்கள் கோபத்தையும் வருத்தத்தையும் தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தான் அதிகாரிகளின் கூற்றுப்படி, திங்கள்கிழமை இரவு காபூலில் உள்ள உமர் போதை மீட்பு சிகிச்சை மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இந்தச் சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்த ஆப்கானிஸ்தான் டி20 கிரிக்கெட் அணியின் தலைவர் ரஷீத் கான், பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை எந்தச் சூழ்நிலையிலும் நியாயப்படுத்த முடியாது என்று கூறினார்.
காபூலில் பாகிஸ்தான் விமானத் தாக்குதல்களின் விளைவாக பொதுமக்கள் உயிரிழந்ததாக அண்மைய செய்திகள் என்னை மிகவும் வருத்தப்படுத்துகின்றன என்றும் அவர் கூறினார்.
வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ பொதுமக்கள் இலக்குகள் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறலுக்குச் சமம் என்று நட்சத்திர சகலதுறை வீரர் வலியுறுத்தினார்.
பொதுமக்கள் வீடுகள், கல்வி வசதிகள் அல்லது மருத்துவ உள்கட்டமைப்பை வேண்டுமென்றோ அல்லது தவறுதலாகவோ குறிவைப்பது ஒரு போர்க்குற்றமாகும்.
குறிப்பாக புனித ரமலான் மாதத்தில் மனித உயிர்களை முற்றிலும் புறக்கணிப்பது வேதனையானது மற்றும் ஆழ்ந்த கவலைக்குரியது என்றும் ரஷீத் கான் கூறினார்.
அதேநேரம், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த சகலதுறை வீரர் மொஹமட் நபியும் தாக்குதலுக்கு சமூக ஊடகங்களில் ஒரு உணர்ச்சிபூர்வமான செய்தியில் பதிலளித்தார்.
சம்பவத்தில் இழந்த உயிர்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.
காபூலில் உள்ள, போதைக்கு அடிமையான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரு பெரிய மருத்துவ நிலையமான உமர் போதை சிகிச்சை மருத்துவமனை மீது பாகிஸ்தான் இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400 பேரை எட்டியுள்ளதாகவும், மேலும் சுமார் 250 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.












