மட்டக்களப்பு மாவட்டத்தினை பரபரப்பாக்கியுள்ள கொ*லை மற்றும் கொள்ளை சம்பங்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக எந்த சட்டத்தரணியும் ஆஜராகக்கூடாது என்பதை வலியுறுத்தியும் குறித்த சம்பவம் தொடர்பில் 24மணிநேரத்தில் சந்தேக நபர்களை கைதுசெய்த பொலிஸாருக்கு நன்றி தெரிவித்தும் இன்று மட்டக்களப்பு நகரில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பில் நடைபெற்ற இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்கும் வகையில் இவ்வாறான சம்பங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான கடுமையான தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என்பது தொடர்பில் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்திபூங்காவில் அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் இளைஞர் யுவதிகள் ஊர்வலமாக திருமலை வீதியுடாக சென்று மட்டக்களப்பு பொலிஸ் சுற்றுவட்டம் ஊடாக மீண்டும் காந்திபூங்கா வந்து அங்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அமைதியான முறையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கறுப்பு உடைகள் அணிந்த நிலையில் கறுப்பு துணிகளை அடையாளமாக அணிந்துகொண்டு தமது போராட்டங்களை முன்னெடுத்தனர்.
பிணங்கள் வீசப்பட்ட கிணறு எமது நீதியின் சாட்சியாகட்டும், நீதிவெல்லட்டும் அநீதி வீழட்டும் குற்றவாளிக்கு ஆதரவான எந்தவொரு முயற்சிக்கும் இடமளிக்கமாட்டோம், நீதியை சாகடிக்காதே எந்த சட்டத்தரணியும் குற்றவாளியை தொடாதே, குற்றம் புரிந்தவர்களை பாதுகாக்கமுனையும் எந்தசெயற்பாடுகளையும் அனுமதிக்கமாட்டோம் போன்ற பல்வேறு கோசங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பில் நடைபெற்ற கொ*லை, கொள்ளை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களுக்கு சார்பாக எந்த சட்டத்தரணியும் ஆஜராககூடாது என வலியுறுத்தியுள்ள இளைஞர் யுவதிகள் குறித்த குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் வரையில் தமது போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.
இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு களங்கத்தினை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பில் 24மணி நேரத்தில் விசாரணை முன்னெடுத்து குற்றவாளிகளை கைதுசெய்த கிழக்கு மாகாண பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் அதன் உத்தியோகத்தர்களுக்கு நன்றியும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படவேண்டும் எனவும் அவ்வாறு இல்லாவிட்டால் தமது போராட்டம் பாரியளவில் வேறுவகையில் நடைபெறும் எனவும் இதன்போது எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.












