நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எனது நன்மதிப்பை தெரிவித்துக் கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்;த்துச் செய்தியில் சஜித் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அன்று வியர்வை, கண்ணீர் மற்றும் உயிர் தியாகங்களின் ஊடாக வென்றெடுக்கப்பட்ட எட்டு மணிநேர வேலை நேரமும், மனிதாபிமான சேவை நிபந்தனைகளும் தொழிலாளர் கௌரவத்தின் அடித்தளமாகும்.
அந்த வரலாற்று வெற்றி இன்றும் உலகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் மக்களுக்கு அநீதிக்கு எதிராக கிளர்ந்தெழுவதற்கு பெரும் சக்தியை அளித்துள்ளது.
இலங்கை வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போதும், நாட்டின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்கும் தொழிலாளர் வர்க்கம் தமது உரிமைகளுக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் செய்த அர்ப்பணிப்புகளை நாம் எப்போதும் கௌரவத்துடன் மதிப்பீடு செய்ய வேண்டும்.
இம்முறை மே தினத்தை கொண்டாடும் இத்தருணத்தில், இலங்கையின் உழைக்கும் மக்கள் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது என்றும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் தூரநோக்கற்ற நிர்வாகம் மற்றும் அநீதியான வரிக் கொள்கை காரணமாக வாழ்க்கைச் செலவு வானளாவ உயர்ந்துள்ளதுடன், இதனால் சாதாரண மக்களின் நுகர்வுத் திறன் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும்
முதலீடுகளை ஊக்குவிப்பதாகவும் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரிலும் நடைமுறையிலுள்ள தொழிலாளர் சட்டங்களைத் தளர்த்தி, தொழிலாளர்களின்
வேலைப் பாதுகாப்பையும் உரிமைகளையும் பறிப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை வன்மையாகக் கண்டிப்பதாகவும் எதிர்கட்சித் தலைவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.













