யாழ்ப்பாணத்தில் தேங்காயொன்று 6500 ரூபாவிற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில், சங்கானை மாவடி ஞானவைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்ற பாரம்பரிய விளையாட்டு நிகழ்விலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் வருடந்தோரும் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றுவரும் நிலையில் கடந்த 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை போர்த் தேங்காய் அடிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது இருபதிற்கும் மேற்பட்ட தேங்காய்கள் ஏலத்தில் விடப்பட்டது. ஏல விற்பனையில் கடும் போட்டிகள் நிலவியதுடன், இதன்போது விசேடமாக தேங்காயொன்று பலரது ஏலங்களின் பின்னராக இறுதியாக குறித்த தேங்காயானது 6500 ரூபாவுக்கு விற்பனையானது.
இவ்வாறு ஏலத்தில் வாங்கப்பட்ட போர் தேங்காய்களுக்கு இடையில் மீண்டும் போர்த்தேங்காய் அடிக்கும் போட்டிகள் இடம்பெற்றது.
இதனிடையே கடந்த வருடமும் தேங்காயொன்று அதிகூடிய விற்பனையாக 5000ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.















