1997-ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் நடைபெற்ற கொலைச் சம்பவம் ஒன்றில் தவறாகக் குற்றம் சாட்டப்பட்ட இந்தியத் தொழிலதிபர் ஒருவரின் மனைவி, ஸ்காட்லாந்து அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியைக் கோரியுள்ளார்.
1997 நவம்பர் மாதம் கிளாஸ்கோவைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ட்ரேசி வைல்ட் (Tracey Wilde) என்பவர் அவரது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டார்.
அதன்போது 19 வயதான சௌகத் முகர்ஜி அங்குள்ள கல்லூரியில் மாணவராகப் பயின்று வந்தார்.
கொலை நடந்து மூன்று மாதங்களுக்குப் பின்னர் இந்தியா திரும்பி திருமணமாகி, ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகப் பணியாற்றி வந்த சௌகத் முகர்ஜிக்கு 2014-இல் பழைய கொலை வழக்கில் சந்தேக நபராகக் கருதப்படுவதாகவும், அவரை ஒப்படைக்க வேண்டும் (Extradition) என்றும் ஸ்காட்லாந்து அதிகாரிகள் கோரினர்.
இதனால் சௌகத்தின் தொழில் மற்றும் கௌரவம் முற்றாகச் சிதைந்தது.
நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின்னர் உண்மையான கொலையாளி 2019-இல் கண்டறியப்பட்டடாலும்
இந்தத் தவறான குற்றச்சாட்டால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் கடுமையான மன அழுத்தத்தினால் (Depression) சௌகத் பாதிக்கப்பட்டார்.
தவறான குற்றச்சாட்டால் ஏற்பட்ட வடுவிலிருந்து மீளாத சௌகத் முகர்ஜி, கடந்த 2023-ஆம் ஆண்டு மும்பையில் உயிரிழந்தார்.
இதனால் தனது கணவரின் மரணத்திற்கு ஸ்காட்லாந்து அதிகாரிகளின் தவறான நடவடிக்கையே காரணம் எனக் கூறும் சப்னா, தற்போது ஸ்காட்லாந்து காவல்துறை மற்றும் அரசுத் தரப்புக்கு (COPFS) எதிராக வழக்குத் தொடர முடிவு செய்துள்ளார்.
இதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசாங்கம் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.













