தமிழகத்தில் 108 இடங்களை வென்று அமோகமான தொடக்கத்தைப் பெற்றும், பெரும்பான்மையைப் பெறத் தவறிய தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைவரும் நடிகருமான விஜய், கூட்டணி அரசாங்கத்திற்கான எண்ணிக்கையைத் திரட்டுவதற்காக காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முனைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களின் எண்ணிக்கை 118 ஆகும்.
விஜய் எதிர்க்கட்சி கூட்டணியுடன் இணையத் திட்டமிட்டுள்ளார்.
மேலும், காங்கிரஸுடன் இணைந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றுடனும் பேச்சுவார்த்தை நடத்தக்கூடும்.
இந்தக் கட்சிகளுக்கு விரைவில் அழைப்பிதழ் அனுப்பப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஐ (எம்) மற்றும் ஐயுஎம்எல் ஆகியவை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.
மாநிலத்தில் உள்ள மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகளில், ஏப்ரல் 23 தேர்தலில் காங்கிரஸ் ஐந்து இடங்களையும், ஐயுஎம்எல், சிபிஐ, சிபிஐ (எம்) மற்றும் விசிக தலா இரண்டு இடங்களையும் வென்றன.
காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் டிவிகேவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தால், விஜய் தலைமையிலான கட்சி ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை எளிதாகக் கடந்துவிடும்.
டிவிகே-காங்கிரஸ் கூட்டணி அரசு அமையக்கூடும் என்ற யூகங்களுக்கு மத்தியில் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில், தமிழக நலன்களை முதன்மையாகக் கருத்தில் கொண்டு, கட்சி ஆலோசித்து ஒருமித்த முடிவை எடுக்கும் என்று கூறியுள்ளார்.
தேர்தல் முழுவதும் காங்கிரஸ் தனது சித்தாந்த நிலைத்தன்மையைப் பேணி வந்துள்ளதாகவும், எதிர்கால முடிவுகள் அனைத்தும் மதச்சார்பற்ற விழுமியங்களுக்கான அதன் உறுதிப்பாட்டிற்கு ஏற்பவே அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
டிவிகே-வுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக காங்கிரசுக்குள் நிலவும் உட்கட்சி வேறுபாடுகள் குறித்துப் பேசிய செந்தில், மாறுபட்ட கருத்துக்கள் கட்சியின் கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்பதை ஒப்புக்கொண்டார்.
டிவிகே உடனான சாத்தியமான பேச்சுவார்த்தைகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த செந்தில், இந்த விவகாரம் கட்சியின் மத்திய தலைமை மற்றும் நாடாளுமன்றக் குழுவின் கையில் உள்ளது என்றார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலலில் டிவிகே, திமுகவுக்கு பெரும் தோல்வியைக் கொடுத்தது.
இதில், கட்சியின் தலைவரும் தற்காலிக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்தார்.
ஒட்டுமொத்தமாக திமுக 73 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சியாக மாறியுள்ளது.
அதிமுக 47 இடங்களை வென்று, வெகுதூரம் பின்தங்கி மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது.
அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி (பிஎம்கே) நான்கு இடங்களையும், பாஜக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அஎம்எம்கே) தலா ஒரு இடத்தையும் வென்றன.
தேசிய முற்போக்கு திராவிட கழகமும் (தேமுதிக) ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.
இது கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாக தமிழகத்தில் ஆழமாக வேரூன்றியிருந்த திராவிட ஆதிக்கத்தை முதன்முறையாகத் தீர்க்கமாக உடைத்தெறிந்த நிகழ்வாகும்.
டிவேகே அரசாங்கத்தை அமைப்பதில் வெற்றி பெற்றால், அது தமிழகத்தில் முதல் முறையாக, 2024 பெப்ரவரியில் தொடங்கப்பட்ட ஒரு கட்சி, இரண்டு ஆண்டுகளுக்குள் ஆட்சிக்கு வருவது ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் மைல்கல்லாக அமையும்.














