ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்திற்கான (Holyrood) தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
புதிய ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று நடைபெற்று வருகின்றது.
தபால் மூலம் ஏற்கனவே வாக்களித்தவர்களைத் தவிர, ஏனைய வாக்காளர்கள் இன்று காலை முதல் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இன்று காலை 07:00 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, இரவு 22:00 மணி வரை இடைவிடாது நடைபெறும்.
இங்கிலாந்தைப் போலன்றி, ஸ்காட்லாந்தில் வாக்காளர்கள் வாக்குச் சாவடியில் எவ்வித அடையாள அட்டையையும் (ID) சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2021-ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பின்னர் சில தொகுதிகளின் எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், மொத்த நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கை 129 ஆக மாற்றமின்றித் தொடர்கிறது.
இவற்றில் 73 உறுப்பினர்கள் உள்ளூர் தொகுதிகளிலிருந்தும், மீதமுள்ள 56 உறுப்பினர்கள் பெரிய பிராந்தியங்களிலிருந்தும் (Regional seats) தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
வழமையாக வாக்குப்பதிவு முடிந்ததும் நள்ளிரவிலேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கும். ஆனால், இம்முறை செலவுகளைக் குறைக்கவும், மக்கள் ஈடுபாட்டை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதால், நாளை காலை 09:00 மணிக்கே வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகும்.
இதனால் தேர்தலின் முதல் முடிவுகள் நாளை பிற்பகலிலேயே எதிர்பார்க்கப்படுகின்றன.
ஸ்காட்லாந்தின் மொத்த வாக்காளர்களில் ஐந்தில் ஒருவர் ஏற்கனவே தபால் மூலம் தமது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
2021 கொவிட் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, ஒரு முழுமையான ஜனநாயகச் சூழலில் நடைபெறும் இந்தத் தேர்தல் ஸ்காட்லாந்தின் எதிர்கால அரசியல் நகர்வுகளைத் தீர்மானிக்கும் மிக முக்கிய தேர்தலாகக் கருதப்படுகிறது.













