லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதியில் நேற்று இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் உயர்மட்டத் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஹிஸ்புல்லாவின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ‘ரத்வான்’ (Radwan) பிரிவின் தளபதி, ஹிஸ்புல்லாவின் ‘நாசர்’ (Nasser) பிரிவின் உளவுத்துறைத் தலைவர்,
மற்றும் ஹிஸ்புல்லாவின் வான் பாதுகாப்பு கண்காணிப்பு அதிகாரி ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹிஸ்புல்லா அமைப்பின் பலத்திற்கு அதன் நெருங்கிய நட்பு நாடான ஈரான் வழங்கி வரும் பாரிய நிதி மற்றும் இராணுவ உதவிகளே முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
1982-ஆம் ஆண்டு ஹிஸ்புல்லா அமைப்பு உருவான காலத்திலிருந்தே, ஈரான் அதற்குத் தேவையான அனைத்து ஆதரவுகளையும் வழங்கி வருவதுடன், கடந்த பல தசாப்தங்களாக இரு தரப்பும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.
தொடர்ச்சியாக ஹிஸ்புல்லாவின் முக்கியத் தளபதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் இந்தத் தாக்குதல்கள், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன.
















