உக்ரேனுக்கு எதிராக ரஷ்யாவுக்காகப் போரிட்டதில் சுமார் 2,300 வட கொரிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பியோங்யாங்கில் உள்ள ஒரு புதிய நினைவிடத்தின் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்ட பிபிசி நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
2024 ஆகஸ்ட் மாதம் உக்ரேன் குர்ஸ்க் மீது திடீர் ஊடுருவலை நடத்தியதைத் தொடர்ந்து, மேற்கு குர்ஸ்கின் சில பகுதிகளை மீண்டும் கைப்பற்ற உதவுவதற்காக குறைந்தது 11,000 வட கொரியர்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டதாக தென் கொரியா மதிப்பிடுகிறது.
வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன், போரில் உயிரிழந்த வீரர்களுக்கு முன்னதாகப் பகிரங்கமாக அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மேலும், வீரர்களை வழங்கியதற்குப் பதிலாக, பியோங்யாங் மொஸ்கோவிடமிருந்து உணவு, பணம் மற்றும் தொழில்நுட்ப உதவியைப் பெற்றதாக நம்பப்படுகிறது.
ரஷ்யா முழுமையாக மீட்டுவிட்டதாகக் கூறும் குர்ஸ்க் நடவடிக்கையில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையை அந்த இரகசிய ஆட்சி ஒருபோதும் வெளியிடவில்லை – ஆனால் முதல் முறையாக, ஒரு புதிய நினைவிடம் கண்கூடாகத் தெரியும் தடயங்களை வழங்குகிறது.
அவை நமக்கு என்ன சொல்கின்றன என்பது இங்கே.
சுவர்களில் பெயர்கள்
2025 ஒக்டோபரில், ரஷ்யா-உக்ரேன் போரில் கொல்லப்பட்ட வீரர்களைக் கௌரவிக்கும் வகையில், பியோங்யாங்கின் ஹ்வாசோங் மாவட்டத்தில் ஒரு அருங்காட்சியகம் கட்டுமாறு வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு செயற்கைக்கோள் பூமி-படமெடுப்பு நிறுவனமான பிளானட் லேப்ஸ் வழங்கிய செயற்கைக்கோள் படங்களை பிபிசி ஆய்வு செய்ததன் படி, அதே மாதத்திற்குள் அடர்ந்த வனப்பகுதி ஒன்றில் பணிகள் தொடங்கின.

52 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள அந்த வளாகத்தின் ஆரம்பகட்ட கட்டமைப்பு கடந்த டிசம்பர் மாதத்தில் காணப்பட்டது.
இவ்வாண்டு மார்ச் மாதத்திற்குள், பெரும்பாலான வெளிப்புறக் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்திருந்தன.
நிலச்சீரமைப்பு மற்றும் சுற்றியுள்ள வசதிகள் கடந்த மாதம் முடிக்கப்பட்டன.
ஏப்ரல் 26 அன்று திறந்து வைக்கப்பட்ட, வெளிநாட்டு இராணுவ நடவடிக்கைகளின் போர்ச் சாதனைகள் நினைவு அருங்காட்சியகம், “குர்ஸ்க் பகுதியை விடுவிப்பதற்காக” பணியமர்த்தப்பட்ட வட கொரிய வீரர்களின் “ஒப்பிடமுடியாத வீரத்தை” வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று வடகொரியான் அரசு செய்தி நிறுவனமான KCNA தெரிவித்துள்ளது.
இந்த நினைவிடம், பெயர்கள் பொறிக்கப்பட்ட 30 மீட்டர் (98 அடி) நீளமுள்ள இரண்டு நினைவுச் சுவர்கள், ஒரு கட்டிடம் மற்றும் ஒரு கல்லறைத் தோட்டம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
KCNA வெளியிட்ட பல படங்களை பிபிசி ஆய்வு செய்ததில், ஒவ்வொரு சுவரும் சுமார் 14 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அவற்றின் மேற்பகுதியில் சாம்பல் நிறக் கல் கோடுகளால் குறிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
பிபிசியின் கணக்கீட்டின்படி, இந்தப் பிரிவுகளில் ஒன்பதில் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன, மேலும் ஒவ்வொன்றிலும் சுமார் 16 தூண்கள் உள்ளன.


கொல்லப்பட்ட வீரர்களின் எட்டுப் பெயர்கள் ஒரு தூணில் பொறிக்கப்பட்டுள்ளன என்பதை கிழக்குச் சுவரின் நெருக்கமான புகைப்படங்கள் காட்டுகின்றன.
16 தூண்கள் மற்றும் ஒன்பது பிரிவுகளுடன், ஒவ்வொரு சுவரிலும் 1,152 பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன – இதன் மூலம் இரண்டு நினைவுச் சுவர்களிலும் சேர்த்து மொத்தப் பெயர்களின் எண்ணிக்கை 2,304 ஆகிறது.
கொரிய பாதுகாப்பு வியூக நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான சோங்காக் சுங், பிபிசியின் கண்டுபிடிப்பை ஒப்புக் கொண்டுள்ளார்.
எனினும், உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்கள் இல்லாததால் சரியான எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை, ஆனால் பிபிசியின் மதிப்பீடு தென் கொரியாவின் தேசிய உளவுத்துறை (NIS) முன்வைத்த எண்ணிக்கைக்கு நெருக்கமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
2025 செப்டெம்பரில் சுமார் 2,000 வட கொரிய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 2,700 பேர் காயமடைந்ததாகவும் அந்த உளவு நிறுவனம் கூறியது.
ஆனால் இந்த ஆண்டு பெப்ரவரியில், ரஷ்யாவில் பணியமர்த்தப்பட்ட சுமார் 11,000 இராணுவ வீரர்களில், ஏறத்தாழ 6,000 பேர் கொல்லப்பட்டதாகவோ அல்லது காயமடைந்ததாகவோ NIS அந்த எண்ணிக்கையைப் புதுப்பித்தது.
எனினும் அது எண்ணிக்கையின் விவரங்களை வழங்கவில்லை.
பியோங்யாங்கோ அல்லது மொஸ்கோவோ இதுவரை இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களையும் வழங்கவில்லை.















