தரம்சாலாவில் நேற்றிரவு (11) நடந்த விறுவிறுப்பான 2026 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC) அணி பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
டெல்லி அணியின் தலைவர் அக்சர் படேலின் அரைதம், சக வீரர்களான டேவிட் மில்லர் மற்றும் மாதவ் திவாரியின் சிறப்பான அதிரடி ஆட்டம் ஆகியவை அணியின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கின.
211 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணி, தடுமாற்றமான தொடக்கத்திற்குப் பிறகு மீண்டு வந்து.
இறுதியாக ஒரு ஓவர் மீதமிருக்க தங்களது இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்பிற்கு 216 ஓட்டங்களுடன் நிறைவு செய்தது.
போட்டியில் முன்னதாக துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி தங்களது 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 210 ஓட்டங்களை எடுத்தது.
தொடக்க வீரரான பிரியான்ஷ் ஆர்யா 33 பந்துகளில் 56 ஓட்டங்கள் எடுத்து, இந்தத் தொடரில் தனது ஐந்தாவது அரைசதத்தை எட்டினார்.
பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 72 ஓட்டங்களை பஞ்சாப் அணி எடுத்திருந்த நிலையில், அணியின் ஆட்டம் தொடர்ந்து சிறப்பாக இருந்தது.
இருப்பினும், இரண்டாம் பாதியில், குறிப்பிடத்தக்க விக்கெட்டுகள் வீழ்ந்ததாலும், துடுப்பாட்ட தரப்பில் அழுத்தம் அதிகரித்ததாலும் ஆட்டத்தின் போக்கு மாறியது.
இதனிடையே அணித் தலைவர் ஸ்ரேயஸ் ஐயர் 36 பந்துகளில் 59 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இது பஞ்சாப் அணியின் 210 ஓட்டங்கள் என்ற இறுதி மொத்த ஓட்டங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது.
இன்னிங்ஸில் சூர்யான்ஷ் ஷெட்ஜ்ஜும் விரைவாகப் பங்களித்து, இறுதி ஓவர்களில் அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
டெல்லி அணியைப் பொறுத்தவரை, மாதவ் திவாரி மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சிறந்த பந்துவீச்சாளர்களாகத் திகழ்ந்தனர்.
சேஸிங்கில் தர்மசாலா ஆடுகளத்தின் நிலைமைகளைச் சமாளிக்க முடியாமல், டெல்லி அணியின் இன்னிங்ஸ் மோசமாகத் தொடங்கியது.
211 என்ற சேஸிங்கில் டெல்லி அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி எட்டு ஓவர்களுக்குள் 74 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற நிலைக்குச் சுருக்கியது.
எனினும், பின்னர் பல பிடியெடுப்புகளுக்கான வாய்ப்பை தவறவிட்டமை, தவறான ஃபீல்டிங் மற்றும் திறனற்ற பந்துவீச்சு ஆகியவை இறுதியில் பஞ்சாப் அணியின் வெற்றி வாய்ப்புகளைப் பாதித்தன.
இதனால், டெல்லி அணி அந்த இலக்கை வெற்றிகரமாகத் துரத்திப் பிடித்தது.
அக்சர் படேல், தனது ஆக்ரோஷத்தையும் வியூக சாதுரியத்தையும் போட்டியில் வெளிப்படுத்தி 33 பந்துகளில் 56 ஓட்டங்கள் எடுத்தார்.
அவரது இன்னிங்ஸில் எட்டு பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும், இது டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றி வாய்ப்பை திறம்பட மாற்றியது.
28 பந்துகளில் 51 ஓட்டங்கள் எடுத்த டேவிட் மில்லருடன் அவர் அமைத்த இணைப்பாட்டம் போட்டியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
இந்த ஜோடி வெறும் 34 பந்துகளில் 64 ஓட்டங்களை சேர்த்துடன், டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றி வாய்ப்புகளை கணிசமாக உயர்த்தியது.
பின்னர் மார்கஸ் ஸ்டோனிஸின் பந்து வீச்சில் அக்சர் படேல் ஆட்டமிழந்ததும், பென் ட்வார்ஷூயிஸிடம் மில்லர் வீழ்ந்ததும் என ஒரு சிறு தடுமாற்றம் இருந்தபோதிலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கீழ்வரிசை வீரர்கள் தங்கள் நிதானத்தை வெளிப்படுத்தினர்.
அஷுதோஷ் ஷர்மா இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து, 10 பந்துகளில் 24 ஓட்டங்ள் பங்களித்தார்.
மேலும், மாதவ் திவாரி 8 பந்துகளில் 18 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து, அணிக்கு திறம்பட ஆதரவளித்தார்.
இறுதியாக டெல்லி அணி 19 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ஓட்டங்களை எடுத்தது.
இந்தப் போட்டியைத் தொடர்ந்து, டெல்லி கேப்பிடல்ஸ் அணி இதுவரை ஆடிய 12 போட்டிகளில் ஐந்து வெற்றிகளைப் பெற்று, புள்ளிப் பட்டியலில் ஏழாவது இடத்திற்கு முன்னேறியது.
இதற்கு மாறாக பஞ்சாப் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக நான்காவது தோல்வியைச் சந்தித்து, நான்காவது இடத்திலேயே நீடிக்கிறது.














