தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர் எடுத்த தனது முதல் முக்கிய நிர்வாக முடிவாக மாநிலம் முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் செயல்பட்டு வந்த 717 அரசு மதுபான சில்லறை விற்பனை நிலையங்களை மூட ஜோசப் விஜய் இன்று (12) உத்தரவிட்டுள்ளார்.
ஆலயங்கள், மசூதிகள், தேவாலயங்கள், பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் ஆகியவற்றிலிருந்து 500 மீட்டர் சுற்றளவிற்குள் செயல்படும் தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து விற்பனை நிலையங்களையும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூடுமாறு அந்த உத்தரவு அதிகாரிகளுக்கு அறிவுறுத்துகிறது.
தமிழக அரசின் தகவல்படி, மாநிலத்தில் தற்போது மொத்தம் 4,765 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளன.
மூடப்பட உள்ளதாக அடையாளம் காணப்பட்ட 717 கடைகளில், 276 வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலும், 186 கல்வி நிறுவனங்களுக்கு அருகிலும், 255 பேருந்து நிலையங்களுக்கு அருகிலும் அமைந்துள்ளன.
விஜய் பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே மேற்கொண்ட முதல் பெரிய கொள்கைத் தலையீடாக இது அமைந்ததோடு, பொது இடங்களில் மதுபானம் எளிதில் கிடைப்பது குறித்த கவலைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய சமூக சீர்திருத்த நடவடிக்கையாகவும் புதிய அரசால் இது முன்னிறுத்தப்படுகிறது.
இருப்பினும், டாஸ்மாக் மாநிலத்தின் மிகப்பெரிய வருவாய் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகத் தொடர்கிறது.
அதன் விற்பனை நிலையங்களை மூடும் முடிவு, தமிழக அரசுக்கு ஏற்படக்கூடிய நிதிப் பாதிப்புகள் மற்றும் நலத்திட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் அதன் திறன் குறித்த விவாதங்களைத் தூண்டக்கூடும்.
51 வயதான நடிகரும் அரசியல்வாதியுமான விஜய், அவரது தமிழக வெற்றி கழகம் (TVK) தேர்தலில் அபாரமான எழுச்சி பெற்று மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார்.
காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் முஸ்லிம் லீக் ஆகியவற்றின் ஆதரவுடன், தமிழக வரலாற்றில் முதல் முறையாக TVK கூட்டணி அரசை அமைத்துள்ளது.
பதவியேற்ற பிறகு எடுத்த மற்ற முக்கிய முடிவுகளில், வீட்டு உபயோக நுகர்வோருக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்க விஜய் ஒப்புதல் அளித்தார்.
மேலும், மாநிலத்தில் நிலவும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பெண்களின் பாதுகாப்பிற்கென ஒரு சிறப்புப் படையை அமைக்கவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுகளை நிறுவவும் அவர் அனுமதி அளித்தார்.
இருப்பினும், பதவியேற்பு விழாவிற்குப் பிறகு விஜய் வெளியிட்ட மிக முக்கியமான அறிவிப்பு, அவரது அரசியல் போட்டியாளரான திமுகவை நோக்கமாகக் கொண்டிருந்தது.
2021-2026 காலகட்டத்தில் மாநிலத்தின் நிதி நிலைமையை விவரிக்கும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.
மேலும், பெண்களின் பாதுகாப்பிற்காக வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாகப் பராமரிக்கப்படும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார்.













