ஊடக ஒழுங்குமுறை அமைப்பான ‘ஆஃப்காம்’ (Ofcom) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், டிக் டாக் (TikTok) மற்றும் யூடியூப் (YouTube) ஆகிய தளங்கள் குழந்தைகளுக்கு “போதிய பாதுகாப்பு இல்லாதவை” என்று கடுமையாக விமர்சித்துள்ளது.
இத்தளங்களின் உள்ளடக்க பகிர்வுகள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற உள்ளடக்கங்களை வழங்குவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
குழந்தைகளின் இணையப் பாதுகாப்பு குறித்து ஐந்து முக்கிய சமூக ஊடக நிறுவனங்களிடம் ஆஃப்காம் கோரியிருந்த விளக்கங்களின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஆஃப்காமின் கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து, மெட்டா, ஸ்னாப் (Snap), மற்றும் ரோப்ளாக்ஸ் (Roblox) ஆகிய நிறுவனங்கள் நிகழ்நிலையில் சிறுவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் சீண்டல்களைத் தடுப்பதற்கான வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளது.
ஆனால், டிக் டாக் மற்றும் யூடியூப் ஆகிய இரண்டு நிறுவனங்களும் தங்களது தளங்களில் உள்ள தீங்கான உள்ளடக்கங்களைக் குறைப்பதற்கான எந்தவொரு குறிப்பிடத்தக்க மாற்றங்களையும் செய்ய முன்வரவில்லை என்று ஆஃப்காம் குற்றம் சாட்டியுள்ளது.
இதேவேளை, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது குறித்து அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வரும் பொதுஆலோசனைக் காலம் விரைவில் முடிவடையவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.














