பிரிட்டனில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான 5 பென்ஸ் வரிக்குறைப்புச் சலுகை, இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்படும் என பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான புதிய தொழிலாளர் கட்சி அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
திட்டமிட்டபடி இந்த வரிச் சலுகை எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் படிப்படியாக நிறுத்தப்படாமல், நடப்பு 2026-ஆம் ஆண்டின் இறுதி வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே பிரதமர் கீர் ஸ்டார்மர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை, இந்த வரி முடக்க நீட்டிப்பால் நடப்பு நிதியாண்டில் அரசுக்கு 455 மில்லியன் பவுண்டுகள் செலவாகும் எனத் டவுனிங் ஸ்ட்ரீட் (Downing Street) தெரிவித்துள்ளது.
எனினும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளதால், இந்த சுமையை அரசாங்கத்தால் தாங்கிக்கொள்ள முடியும் எனப் பிரதமரின் செய்தித் தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு ரஷ்யா – உக்ரைன் போரினால் எரிபொருள் விலை உயர்ந்தபோது, அப்போதைய கன்சர்வேடிவ் (Conservative) அரசாங்கத்தால் இந்த 5 பென்ஸ் வரிக்குறைப்பு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
12 மாதங்களுக்கு மட்டுமே திட்டமிடப்பட்ட இந்தச் சலுகை, அதன் பின்னர் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.













