உள்நாட்டு தொழில்துறையினரை வலுவூட்டி அவர்களை ஏற்றுமதி சந்தைக்கு பிரவேசிக்கச் செய்வதன் மூலம் டொலர் வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும், முதலீடு செய்வதற்கும் சந்தையை வெல்வதற்கும் தயாராக இருப்பவர்களுக்கு அரசாங்கத்தின் அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இறப்பர் மற்றும் தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் துறையின் முன்னணி வர்த்தகர்களுடன் ஜனாதிபதிஅலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

உலகில் பல்வேறு நாடுகள் உள்நாட்டுத் தொழில்களை ஏற்றுமதிக்கு ஊக்குவிப்பதன் மூலமே பொருளாதார ரீதியாக வலுவடைந்துள்ளன என்பதை இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி தற்போதுள்ள வெளிநாட்டுக் கடன் சுமையிலிருந்தும் சர்வதேச நிதி நிறுவனங்களில் தங்கியிருப்பதிலிருந்தும் விடுபடுவதற்கான ஒரே வழி உள்நாட்டு உற்பத்தித் திறனை அதிகரிப்பதே என்றும் சுட்டிக்காட்டினார்.
உள்நாட்டுத் தொழில்துறையினர் ஏற்றுமதித் துறைக்குள் பிரவேசிப்பதை ஊக்குவிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன் இறப்பர் மற்றும் தேயிலைத் தொழில்துறையை மேம்படுத்துவதற்கும் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கும் 2026-2030 தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டத்திற்கு இணங்க புதிய மூலோபாய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
உற்பத்தித் திறன் மற்றும் தரவுகளின் முக்கியத்துவத்தை இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வருடாந்தம் அதிகரிக்கப்படும் உற்பத்தியின் அளவு குறித்து துல்லியமான புரிதலைக் கொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்.
உற்பத்தி செயல்முறையானது மிகவும் எளிமையானதாகவும் அதே நேரத்தில் செயற்திறனானதாகவும் இருக்க வேண்டும் என்றும் அதில் தொழில்துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கண்டறிவதற்குத் தேவையான அனைத்து தரவுகளையும் அரசாங்கத்திற்கு வழங்குமாறும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
குறிப்பாக உரம் மற்றும் ஏனைய உள்ளீடுகளை வழங்கும் போது அவற்றின் விளைவுகளுக்கும் ஏற்றுமதி வருமானத்திற்கும் இடையே உள்ள தொடர்பை விஞ்ஞான ரீதியாக ஆராய வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.












