ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் வைத்து கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட இலங்கையின் இரு முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து பல அதிதிடுக்கிடும் கொலை மற்றும் குற்றவியல் விபரங்கள் வெளியாகியுள்ளன. மேலதிக விசாரணைகளுக்காக இவர்கள் இருவரும் தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் தனித்தனியாக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை (13) இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த போதே, அங்கு தயார் நிலையில் இருந்த குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் ‘மோதர நிபுண’ என்பவரின் சகோதரரான ‘மோதர சதுர’ மற்றும் ‘புளுமெண்டல் சங்க’ ஆகிய இருவரும் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 25 வயதான ‘மோதர சதுர’ என்றழைக்கப்படும் நபர், மேலதிக தீவிர விசாரணைகளுக்காக நேற்று (14) முற்பகல் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் (CCIB) ஒப்படைக்கப்பட்டுள்ளார். இவருக்கு எதிராகப் பொலிஸ் கோப்புகளில் பதிவாகியுள்ள வழக்கு விபரங்கள்:
2019 ஆம் ஆண்டு கஞ்சா போதைப்பொருள் சட்டவிரோதமாக வைத்திருந்தமைக்கான குற்றச்சாட்டு.
2020 தடியடி மற்றும் கூர்மையான ஆயுதங்களால் நபர் ஒருவரைத் தாக்கிப் பலத்த காயங்களை ஏற்படுத்தியமை.
2022 இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாததால், கடந்த 2022 நவம்பர் மாதம் கொழும்பு இலக்கம் 04 பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இவருக்கு எதிராகப் பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
மற்றொரு ஆபத்தான குற்றவாளியான ‘புளுமெண்டல் சங்க’ என்பவரிடம் இருந்து அதிதிடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதால், அவர் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
2010 நபர் ஒருவரைக் கொடூரமாகத் தாக்கியமை தொடர்பான வழக்கு,
2015 நபர் ஒருவரைத் திட்டமிட்டுச் சுட்டுக் கொலை செய்த சம்பவத்தின் முதன்மைச் சந்தேகநபர்,
2016 மாளிகாவத்தை பகுதியில் வைத்து சிறைச்சாலை கைதிகள் பேருந்து ஒன்றின் மீது நடத்தப்பட்ட பாரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குச் சதித்திட்டம் தீட்டி உடந்தையாக இருந்தமை, அத்துடன் சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் தோட்டாட்களுடன் கைது செய்யப்பட்டமை, 2018 நபர் ஒருவரைச் சுட்டுக் கொலை செய்தது மட்டுமன்றி, மேலும் மூவருக்குப் பலத்த துப்பாக்கிச் சூட்டுக் காயங்களை ஏற்படுத்தியமை போன்ற
பாரிய குற்றப் பட்டியலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்து கொண்டு இலங்கைக்குள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் கொலைக் கலாச்சாரத்தை இயக்கி வந்த இந்த இரு முக்கிய புள்ளிகளின் கைது, இலங்கையின் பாதுகாப்புத் துறையினருக்குக் கிடைத்துள்ள ஒரு பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது.
இவர்களுடன் தொடர்புடைய உள்நாட்டு நெட்வொர்க்குகளைக் கண்டறியப் பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.














