நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்ட ‘கிரிஷ்’ (Krrish) பரிவர்த்தனை தொடர்பான வழக்கில், இரண்டு இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டது.
அதன்படி, வெளிநாட்டுச் சாட்சிகளுக்கான நீதிச் சேவை ஆணைக்குழுவின் நடைமுறைக்கு இணங்க அழைப்பாணையை அனுப்புமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவர்ந்துருகொட உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் சாட்சியம் அளிக்க வேண்டிய இருவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று குற்றப் புலனாய்வுத் துறை (CID) தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இலங்கையில் ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதாகக் கூறி, இந்தியாவின் ‘கிரிஷ்’ (Krrish) நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாயைப் பெற்றுக்கொண்டதன் மூலம் நாமல் ராஜபக்ஷ குற்றவியல் ரீதியான நம்பிக்கைத் துரோகத்தைச் செய்ததாகத் சட்டமா அதிபர் சுமத்திய குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இவ்வழக்குத் தொடரப்பட்டுள்ளது.














