பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) இந்த ஆண்டுக்குள் இரத்து செய்யப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (25) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
1979 இல் ஓராண்டு காலத்திற்கான தற்காலிக நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சட்டம், அதனை இரத்து செய்ய வேண்டும் என்ற நீண்டகாலக் கோரிக்கைகள் இருந்தபோதிலும், சுமார் 46 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.
குடிமை உரிமைகள் குறித்த கவலைகள் மற்றும் நீண்ட காலமாக அது தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவது ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, அந்தச் சட்டத்தை நீக்கக் கோரி தொடர்ச்சியான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே, இந்த ஆண்டிற்குள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் இரத்து செய்யும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்கொள்வது தொடர்பாக அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தக் கருத்தை வெளியிட்டார்.
இதன்போது மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, ஊழல், திட்டமிட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச் செயல்களுக்கும் அரசியலுக்கும் இடையிலான தொடர்புகள் ஆகியவற்றை உறுதியான நடவடிக்கைகளின் மூலம் கையாள வேண்டும் என்றும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.
இத்தகைய நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்குத் தேவையான சட்டக் கட்டமைப்பும் அரச நிறுவனங்களும் ஏற்கனவே நாட்டில் உள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த முயற்சிகளுக்கு எதிர்க்கட்சியே முக்கிய தடையாக மாறியுள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.
அத்துடன், ரக்பி வீரர் வசிம் தாஜுதீனின் கொலை மற்றும் 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகள் உள்ளிட்ட பல முக்கிய சம்பவங்களை நினைகூர்ந்த ஜனாதிபதி அநுர, அரசு அமைப்பிற்குள் உள்ள சில சக்திகள் இதில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும், இதுபோன்ற சம்பவங்களுக்குப் பின்னணியில் உள்ள உண்மை முழுமையாக வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
குற்றவியல் விசாரணைகளை மேற்கொள்ளும் சட்ட அமுலாக்க மற்றும் புலனாய்வு அதிகாரிகளுக்கு அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும், அத்தகைய பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை அச்சுறுத்தவோ அல்லது மிரட்டவோ முயற்சிப்பதற்கு எதிராக அவர் எச்சரித்தார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவதையும், பொறுப்புக்கூறலை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி பொதுமக்களையும் கேட்டுக்கொண்டார்.














